புதிய அரசியலமைப்புக்கான முயற்சியை தமிழ்த்தேசம் ஒன்றிணைந்து நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-“தமிழ்த் தேசத்திற்குள் இருக்கும் அனைத்து மக்களும் முழுமையாக விடுதலை அடையக்கூடிய வகையில், நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோளாக இருந்தது.
சிங்கள தேசத்தின் எமது இனத்திற்கெதிரான அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதென்பது எமது செயற்பாடுகளில் ஒரு அங்கம் மட்டுமே.
இந்தத்தீவில் ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றதென்பதை சர்வதேசத்திற்குச் சொல்லக்கூடிய சூழல் நாம் இந்த ஒற்றையாட்சி அரசியலமைப்புக்களை நிராகரித்து வந்ததால்தான் அமைந்தது.
கொண்டுவரப்படவிருக்கும் புதிய அரசியல் அமைப்புக்கான முயற்சியை தமிழ்த்தேசம் எதிர்க்க வேண்டும்”என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.