தமிழர்களின் பிரச்சினைகளை இழுத்தடிப்பு செய்து தூர்ந்துபோகச் செய்ய முயற்சி

தமிழர்களின் பிரச்சினைகளை இழுத்தடிப்பு செய்து தூர்ந்துபோகச் செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தோடு இலங்கைக்கு தொடர்ந்தும் கால அவகாசம் வழங்கப்படுவதனால் எந்தவித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை என்றும் இதனால் மக்களின் பிரச்சினை தொடர்ச்சியாக இழுபறிக்கே செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் இன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்பை சந்தித்து கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“ஜெனீவா தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் வழங்குவது என்பது நான்கு வருடத்தில் செய்யாததை இரண்டு வருடங்கள் மேலும் கொடுப்பதால் அது நடைமுறைப்படுத்தப்படாது என்பது எமது கருத்து.

போர்வீரர்களுக்கு எதிராக எந்தவிதமான விசாரணைகளையும் முன்னெடுக்க அனுமதிக்கமாட்டோம் என ஜனாதிபதியே கூறியிருக்கின்றார்.

இவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்படும்போது மேலும் மேலும் கால அவகாசம் வழங்கப்படுவதனால் எந்தவித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை.

எமது பிரச்சினைகளை இழுத்தடிப்பு செய்து தூர்ந்துபோகச் செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு அந்நிய நாடுகளும் உதவும் வகையில் செயற்படுவதுடன் எமது கட்சிகளும் அவ்வாறு செய்வதால் தங்களுக்குரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து செயற்பட்டுவருகின்றனர்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பாதுகாப்பு சபைக்கு உண்மையினை எடுத்துக்காட்டி இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதாக இருந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இதனை அனுப்பவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்