புலனாய்வு தகவல் பரிமாற்றத்தினால் தீவிரவாதத்தை அழிக்கலாம் – மகிந்தவிடம் அமெரிக்க தூதுவர்

தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து, நட்பு நாடுகளுக்கிடையில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில் நேற்று முன்தினம் அமெரிக்க தூதுவர் சந்தித்துப் பேசினார்.

இதன்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

2001 செப்ரெம்பர் 11 தாக்குதலை அடுத்து, தமது நாடு தீவிரவாதிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளதன் மூலம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைக் கண்டித்த அமெரிக்கத் தூதுவர், தீவிரவாதத்தை அடியோடு அழிக்க சிறிலங்காவுக்கு எத்தகைய உதவியை வழங்கவும் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்