தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

இந்தியாவில், 17ஆவது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு இடம்பெற்றது.

இந்த தேர்தலில் 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தகுதி பெற்ற சுமார் 90 கோடி வாக்காளர்களில் 67 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.

இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை தவிர பெரும்பாலான மாநிலங்களில் பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளுமே முன்னணியில் இருந்தன. இந்த முன்னணி தொடர்ந்து நீடித்தது.

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 350 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

இதில் பாரதீய ஜனதா மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்த பட்சம் 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவுக்கு அதைவிட கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன.

குஜராத், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்களிலும் மற்றும் தலைநகர் டெல்லியிலும் பாரதீய ஜனதா அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றியது. உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 2ஆவது முறையாக போட்டியிட்ட பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்றார். குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் (லக்னோ), நிதின் கட்காரி (நாக்பூர்) உள்ளிட்ட தலைவர்களும் வெற்றி வாகை சூடினார்கள்.

எனவே மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமர் ஆகிறார். மத்தியில் அவரது தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி 2ஆவது முறையாக அரியணை ஏறுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போன்றே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த கூட்டணிக்கு 96 இடங்கள் கிடைத்தன. இதில் காங்கிரஸ் மட்டும் 51 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது.

கடந்த தேர்தலில் வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையில் இருந்த காங்கிரஸால் இந்த தடவையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாமல் போய்விட்டது.

காங்கிரஸ் கூட்டணிக்கு கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே கைகொடுத்து உள்ளன. கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளையும் காங்கிரஸ் 18 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. அங்கு பாரதீய ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றார். ஆனால் அமேதி தொகுதியில் அவர், பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.

ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றார்.இதேவேளை, தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இந்த கூட்டணி தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் புதுச்சேரி உள்ளிட்ட 38 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த அணியில் 19 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதேபோல் 10 இடங்களில் போட்டியிட்ட காங்கிரசுக்கு 9 இடங்கள் கிடைத்தன.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், ம.தி.மு.க, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன. சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க-பாரதீய ஜனதா கூட்டணியில் 20 தொகுதிகளில் களம் இறங்கிய அ.தி.மு.க. தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அந்த கூட்டணியில் இடம்பெற்ற பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம், த.மா.கா., என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

தேசிய அளவில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கூட்டணிகளையும் சாராத பிற கட்சிகள் 97 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாரதீய ஜனதா தோல்வி அடைந்து காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இதனால் அந்த கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், இப்போது நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்