ஒரு முடிவு கிடைக்கும் வரை புதுச்சேரியை விட்டு நகர மாட்டோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ் செல்வன் கூறி உள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை தாங்கள் விலக்கிக் கொள்வதாக மனு அளித்தனர். இந்நிலையில் டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
வார இறுதி நாள்களுக்காக அந்த ரிசார்ட்டில் ஏற்கெனவே முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்ததால், நான்காவது நாளான இன்று அந்த ரிசார்ட்டிலிருந்து வெளியேறினார்கள். புதுச்சேரி 100 அடி சாலையில் இருக்கும் ‘தி சன் வே மேனர்’ என்ற நட்சத்திர அந்தஸ்து பெற்ற சொகுசு விடுதிக்கு இடம் பெயர்ந்தார்கள்.
இது குறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் கூறியதாவது:-
தினகரன் இன்று புதுச்சேரி வருகிறார், அவருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். விடுதி அறைகள் 2 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டதால் வேறு விடுதிக்கு மாறுகிறோம். இந்த விவகாரத்தில் ஒரு முடிவு கிடைக்கும் வரை புதுச்சேரியை விட்டு நகர மாட்டோம் என கூறினார்.