சஜித் பிரேமதாச அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு சம்மேளனக் கூட்டத்தில் இன்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐதேகவின் சிறப்பு சம்மேளனக் கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் ஆரம்பமாகியது.
இதில், ஐதேக தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்னிறுத்துவதாக அறிவித்தார். சஜித்தின் தாயார் ஹேமா பிரேமதாசவை மேடையில் அழைத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து, கட்சியின் இந்த தீர்மானத்துக்கு சம்மேளனம் ஒருமனதாக அங்கீகாரம் அளித்தது.
அத்துடன், 2015இல் ஆரம்பிக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தத்தையும், அதிகாரப் பகிர்வு, தேர்தல் முறை மாற்றம் உள்ளிட்ட மறுசீரமைப்பு திட்டங்களை- பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தொடர்ந்து முன்னெடுப்பதெனவும் இந்த சம்மேளனத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ஐதேக தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.