எனது வாக்கு கஜேந்திரகுமாரிற்கே:சி.வி!

வடக்குக் கிழக்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவ்வாறான ஒரு பின்னணியில் கஜேந்திரகுமார் தேர்தலை புறக்கணிப்பது நடைமுறை சாத்தியமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து தொடர்பாக பதிலளித்துள்ள அவர்

“வழமைப் போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தேர்தல் புறக்கணிப்பை கண்காணித்து வழிநடத்தியிருப்பார்கள்.

எனினும் தற்பொழுது வடக்குக் கிழக்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவ்வாறான ஒரு பின்னணியில் கஜேந்திர குமார் எவ்வாறு தேர்தல் புறக்கணிப்பை வெற்றிகரமாக அமுல்படுத்துவார்? மேலும் சிங்கள தேசிய கட்சிகளுக்கு ஆதரவான உள்ளூர் கட்சி கட்சிகள் இயங்கி வருகின்றன.

அவ்வாறான ஒரு பின்னணியில் எவ்வாறு கஜேந்திரகுமார் சிங்கள வேட்பாளர் ஒருவரை புறக்கணிக்குமாறு கோர முடியும்? கடந்த பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாக்குகள் என்ன பட்ட போது பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

அவ்வாறான ஒரு பின்னணியில் தேர்தலை பொதுமக்கள் நிராகரித்தால் என்ன நடக்கும், வாக்காளர்கள் வீட்டில் இருக்கும்போது அவர்களது வாக்குகள் அளிக்கப்படலாம்.

மறுபுறத்தில் கஜேந்திரகுமார்; போன்ற மூன்று மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய பொது வேட்பாளர் ஒருவரினால் தமிழ் மக்களுக்கு நல்ல சேவையை வழங்க முடியும்.மூன்று மொழிகளும் தெரிந்த ஒரு பொது வேட்பாளரினால் ஏனைய இன சமூகங்களுக்கும் தகவல்களை எடுத்துச் சொல்ல முடிகின்றது.

அவ்வகையில் கஜேந்திரகுமார் தேர்தலில் போட்டியிட்டால் எனது வாக்கு அவருக்கே எனினும் அவர் தொலைக்காட்சியில் சிங்கள மொழியில் உரையாற்ற வேண்டும். எங்களது தமிழர் பிரச்சனைகளை அவர் எடுத்துரைக்க வேண்டும் என விரும்புகின்றேன்” என சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்