புத்தூர் இடுகாட்டில் சேதம் விளைவித்தமை! கைதானவர்கள் பிணையில் செல்ல அனுமதி!

புத்தூர் கலைமதி பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 24 பேரும் தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜூட்சன், நேற்று (30) அனுமதியளித்தார்.

புத்தூர் பகுதியில் உள்ள கிந்துசிட்டி இடுகாட்டில், நீதிமன்ற உத்தரவுக்கமைய இடம்பெற்று வரும் கட்டட வேலைக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் அரச சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் சந்தேநபர்கள் இருவரைக் கைது செய்யச் சென்ற அச்சுவேலி பொலிஸாருடைய ஜீப் வண்டிக்கு சேதம் விளைவித்து, கடமைக்கு இடையூறுவிளைத்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழே, இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்தநபர்களுக்கு எதிராக, நீதிமன்றால் கடந்த ஜூன் மாதம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டு மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

மேற்படி வழக்கு, விசாரணைக்கு நேற்று (30) எடுத்துகொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி, பிணை விண்ணப்பம் செய்தார்.

அன்றாட கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்துவரும் மேற்படி நபர்களின் குடும்ப நிலைமை தொடர்பிலும் நீதவானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன், இந்து மயானத்தில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளுக்கு எந்தவித இடையூம் விளைவிக்க கூடாது என கடுமையான உத்தரவையும் பிறப்பித்தார். இனிவரும் காலங்களில் யாராவது இடையூறு செய்வார்களாயின், கைது செய்யப்பட்டு பிணையில் வர முடியாதவாறு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என நீதவான் எச்சரித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்