கடந்த காலத்தில் விடப்பட்ட தவறுகள் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதைத்தான் மகிந்த ராஜபக்சவிடம் எடுத்துக்கூறினேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.
‘‘எனது ஆட்சிக் காலத்தில் சம்பந்தன் இப்படி வந்து மனம்விட்டுப் பேசியிருந்தால் பல பிரச்சினைகளைத் தீர்த்திருக் கலாம்’’ என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மகிந்தவின் இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது:இது நல்ல சந்திப்பு. ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறினோம். மகிந்த ராஜபக்சவின் அழைப்பிலேயே இது நிகழ்ந்தது.
அண்மைக் காலமாக இதற்கான ஏற்பாடுகள் இருந்தன. இப்போதுதான் சந்திப்பு சாத்தியமாயிற்று. பல விடயங்கள் குறித்துப் பேசினோம். தற்போதைய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் குறித்து நான் எடுத்துரைத்தேன்.
புதிய அரசமைப்புக்கு ஆதரவளிக்கவேண்டும் என அவரிடம் வலியுறுத்தினேன். இரண்டு முதன்மைக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து நாட்டின் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க முன்வந்துள்ளன, பிளவுபடாத ஒரு நாட்டுக்குள் ஒருமித்த தீர்வு காணப்பட ஏதுநிலை உருவாகியுள்ளது, மக்கள் ஒருவித எதிர்பார்ப்புடன் உள்ளனர் என்பதை எடுத்துச் சொன்னேன்.
நீங்களும் உங்களது பதவிக்காலத்தில் பல முன்மொழிவுகளைச் செய்திருக்கிறீர்கள் என்றும் சுட்டிக்காட்டினேன். இப்போது உங்களினதும் உங்கள் கட்சி சார்ந்த தலைவர்களினதும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்திக் கூறினேன்.
எல்லாவற்றையும் செவிமடுத்தார். கடந்த காலத்தில் விடப்பட்ட தவறுகள் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதை நான் அவருக்கு சொல்லியிருக்கிறேன். இந்தக் கருமங்களுக்கு ஒத்துழைக்க வேண்டியது அவரின் கடமை என்பதையும் வலியுறுத்தியிருக்கிறேன் — என்றார் சம்பந்தன்.