அடக்கியாளும் யாப்புக்கள் எமக்கு விமோசனம் தராது – எம்மை நாமே ஆள விடுங்கள் – முதலமைச்சர்

“எக்காலத்திலும் எம்மை நாமே ஆள வழிவிடுங்கள் என்பதே எமது கோரிக்கையாக இருக்க வேண்டும்.” பெரும்பான்மையினரின் தற்துணிபின் பேரில் அவர்கள் அடக்கியாளக்கூடிய அதிகாரத்துடன் தயாரிக்கப்படுகின்ற எந்த ஒரு அரசியல் யாப்பும் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை அளிக்கமாட்டா. மாறாக முற்று முழுதாக சட்டப்படி வர்ணிக்கப்பட்டு தமிழர்க்குத் தரப்படும் அதிகாரங்கள் திரும்பிப்பெற முடியாதவையாக இருந்தால்த்தான் நாம் எதிர்காலத்தில் சுதந்திரமாக வாழமுடியும். எனத் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் எனும் பேசுபொருளில் கலந்துரையாடல் நிகழ்வு யாழ் வீரசிங்க மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தலைமையுரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரது உரை வருமாறு,

தமிழ் மக்களின் பேரியக்கமாக இயங்கவேண்டிய தமிழ் மக்கள் பேரவை இரண்டு பிரமாண்டமான “எழுக தமிழ்” கூட்டங்களின் பின்னர் கும்பகர்ணன் போல் தூங்கப் போய்விட்டதா என்ற கேள்வி எழுந்ததால்த்தான் நாங்கள் விழிக்கத் தொடங்கியுள்ளோம். கட்சியாக இருப்பது இலேசான காரியம். தேர்தல் காலத்தில் எழுந்து கொண்டு மக்களுக்கு “சந்திரனைத் தருவோம்” “சூரியனைத் தருவோம்” என்று கூறி வாக்கெடுத்து விட்டு மீண்டும் தூங்கப் போகலாம். ஆனால் ஒரு மக்கள் பேரியக்கமாகப் பரிணாமம் பெற்று அதே பரிமாணத்தில் தொடர்வதென்பது அவ்வளவு இலேசான காரியமன்று. பேரியக்கங்களில் இருப்போர்க்கு அர்ப்பணிப்பு அவசியம். சதாகாலமும் எம்மை நம்பியிருக்கும் எம் மக்களின் நலன் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இருக்க வேண்டிய கடப்பாடு மக்கள் இயக்கங்களுக்கு உண்டு.

தமிழ் மக்கள் பேரவையை வழி நடத்தும் அனைவரும் தொடர் காரியங்கள் பலவற்றில் சதாகாலமும் ஈடுபட்டவர்கள். தமது தொழில் ரீதியான பொறுப்புக்களில் இருந்து எளிதில் விடுபட முடியாதவர்கள். ஆகவே தான் எம்மை வருத்தி இவ்வாறான கூட்டங்களில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டிய பொறுப்பு எமது ஒழுங்கமைப்பாளர்களுக்கு உண்டு. எம் அனைவரதும் அர்ப்பணிப்பு, ஆர்வம், ஈடுபாடு என்பவற்றில் எவருக்குஞ் சந்தேகம் இருக்காதென்று நினைக்கின்றேன். ஆனால் கால நேரத்தின் கட்டுப்பாடுகள் எம்மை சதாகாலமும் கலக்கிக் கொண்டே இருக்கின்றன. அப்படி இருந்தும் இந்தக் கூட்டத்தைச் சிறப்புற ஒழுங்கு செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் முதற்கண் தெரிவிக்கின்றேன்.

எம்முடன் வழக்கமாகக் கலந்து கொள்ளாத ஆனால் எம்முடன் தொடர்பில் இருக்கும் திரு.நிலாந்தன், திரு.யோதிலிங்கம், திரு.மௌசூர் மௌலானா, பேராசிரியர் கணேசலிங்கம், திரு.குசல் பெரேரா ஆகியோரை வரவேற்பதில் மன மகிழ்வடைகின்றேன். கொழும்பில் இருந்து வந்துள்ள திரு.குசல்பெரேரா அவர்களுக்குச் சிறப்பான எனது பிரத்தியேக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உகந்த கேள்விகளைக் கேட்டு அவற்றை அலசி ஆராய்வதால் கூட்டத்தில் இருந்து செவிமடுப்போர் நன்மை பெறுகின்றார்கள். உண்மை நிலையை விளங்கிக் கொள்கின்றார்கள். அந்த வகையில் 5 விடயங்கள் இன்று ஆராயப்பட இருக்கின்றன.
முதலாவது விடயம் மிக முக்கியமானது. அரசியலமைப்பு விடயத்தில் பெரும்பான்மையினர் முகத்தைச் சுளிப்பார்கள் என்பதால் எமது தேவைகளையும், முன்னுரிமைகளையும், அபிலாஷைகளையும், நோக்குகளையும் மூட்டை கட்டி வைக்க வேண்டுமா என்பதே அது.

அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகின்றேன். ஒரு மத்திய அமைச்சர் வடமாகாணத் திணைக்களம் ஒன்றிற்குச் சில நிதி உதவிகள் செய்து அந் நிதியில் ஒரு கட்டடம் கட்டப்பட்டது. அதனைத் திறக்க இருக்கும் போது அதற்கு ஒரு சிங்களப் பெயர் வைக்க வேண்டும் என்றார் அமைச்சர். எமது அலுவலர்கள் அதற்கென்ன என்று கூறி அவர் வந்து கட்டடத்தைத் திறக்க நாள் நேரமும் குறித்தாகி விட்டது. அப்போது தான் இது பற்றி எனக்குத் தெரிய வந்தது. “ஏன் சிங்களப் பெயரை எமது மாகாணத்தில் கட்டிய கட்டடத்திற்கு வைக்கச் சம்மதித்தீர்கள்?” என்று கேட்டேன். “அவர்கள் பணந்தானே! அது தான்” என்றார்கள். “பணம் தரும் போது உங்கள் கட்டடத்திற்கு சிங்களப் பெயர் தான் வைக்க வேண்டும். இல்லையேல் பணம் தரமுடியாது என்று கூறினார்களா?” என்று வினவினேன். “இல்லை” என்றார்கள். “அப்படியானால் அவர்கள் பணம் தந்தபடியால் அவர்கள் கூறும் பெயரை வைக்க உங்களுக்கு ஒரு கடப்பாடு இருப்பதாகக் கூறுகின்றீர்களே” என்றேன். “முன்னரே சலுசல, ஒசுசல என்று பல பெயர்கள் வழக்கில் இருக்கின்றன தானே?” என்றார்கள். “அப்போது எமது மக்களின் பிரதிநிதிகள் இருக்கவில்லை. உங்களைப் போன்ற அலுவலர்கள் தான் இருந்திருப்பார்கள். நீங்கள் இப்போது சிந்திப்பது போலத் தான் அப்போதும் அலுவலர்கள் சிந்தித்திருப்பார்கள். அதை வைத்து இப்பொழுது எமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும் போது அவ்வாறான ஒரு செயலுக்குச் சம்மதம் தெரிவிப்பது ஒரு பிழையான காரியம் அல்லவா?” என்றேன். பதிலில்லை.
ஆனால் அடுத்த நாள் மத்திய அமைச்சரே தொலைபேசியில் என்னுடன் பேசினார். “நாங்கள் நாடு பூராகவும் இதே பெயரைத் தான் இப்பேர்ப்பட்ட கட்டடங்களுக்கு வைக்கின்றோம். நீங்களும் அதற்கு உடன்பட வேண்டும்” என்றார். “ஏன் அதற்கு உடன்பட வேண்டும்?” என்று கேட்டேன். “இது ஒரே நாடு. பெயர்களில் ஒற்றுமை இருக்க வேண்டும்” என்றார். நான் சிரித்துவிட்டு “ நாடு ஒன்றுதான். ஆனால் நாங்கள் வேறு, நீங்கள் வேறு, உங்கள் மொழி வேறு, எங்கள் மொழி வேறு, உங்கள் மதம் வேறு, எங்கள் மதம் வேறு, உங்கள் வாழ்க்கை முறை வேறு, எங்கள் வாழ்க்கை முறை வேறு. இதற்காகத் தானே நாங்கள் சமஷ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் யாப்பிற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். எங்கள் தனித்துவத்தை நீங்கள் மதிக்க வேண்டும்” என்றேன். அவர் ஒன்றும் கூறவில்லை. ஆனால் திறக்க அவர் வரவுமில்லை. அந்தக் கட்டடம் இன்னமும் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படவில்லை என்றே நம்புகின்றேன்.

இங்குதான் முதலாவது கேள்விக்கான பதில் மறைந்துள்ளது. மற்றவர்கள் முகத்தைச் சுளிப்பார்கள் என்பதால் நாம் எமது தனித்துவத்தை விட்டுக் கொடுத்தால் இருபது வருடங்களில் எல்லாமே ஒசுசல, லக்சல, சலுசல ஆகிவிடுவன.
எம்முட்சிலர் இவை யாவும் மரங்கள் தானே என்று பார்க்கின்றோம். ஆனால் வனத்துள் நுழைந்துவிட்டோம் என்பதை அறியாமல் இருக்கின்றோம். நேரஞ் சென்றதும் கொடிய காட்டு மிருகங்களுடன் போராட நேர்ந்திடும் என்பதை உணராமல் இருக்கின்றோம். “அதற்கென்ன! இன்று ஒரு சலுசல என்று பெயர் வைத்தால் குடியா முழுகிப் போய்விடும்?” என்று சிலர் கேட்கின்றார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில் “ஆம்! எமது தமிழ்ப் பேசுங் குடியே முழுகிப்போய்விடும்” என்பதே.

அடுத்த கேள்வி பெயரில் என்ன இருக்கின்றது என்பது. எங்களுக்குத் தேவை அதிகாரப்பரவல். அது ஒற்றையாட்சிக்குள் வந்தால் என்ன, சமஷ்டி என்ற ஒரு பெயர் தாங்காத ஒரு அலகின் கீழ் வந்தால் என்ன என்று சிலர் கேட்கின்றார்கள். இங்குதான் சட்டத்தைப் பற்றியும் உச்ச நீதிமன்றத்தைப் பற்றியும் சற்றுச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

எவ்வளவு அதிகாரப்பரவல்கள் ஒற்றையாட்சியின் கீழ் பெறப்பட்டாலும் அது “கொடுத்தவனே எடுத்துக்கொண்டாண்டி” என்ற நிலைக்கு எத்தருணத்திலும் வரமுடியும் என்பதை நாங்கள் மறக்கக்கூடாது.

ஒரு தந்தையார் மகனுக்கு கைப்பைக்காசு வாராவாரம் கொடுத்து வருகின்றார். ஏதோ காரணத்திற்காக அவர் கொடுக்காமல் விடுகின்றார். மகன் அப்படி உங்களால் செய்யமுடியாது கொடுத்தே ஆகவேண்டும் என்கின்றான். அது எனது முடிவு என்று தந்தையார் கூறுகின்றார். மகன் உச்ச நீதிமன்றம் சென்றாலும் அதேவாறு தான் பதில் கிடைக்கும். அதாவது தனது நல்லெண்ணம் காரணமாகவே கைப்பைக்காசை தந்தை மகனுக்குக் கொடுத்தார். அதை நிறுத்த தந்தைக்குரித்துண்டு என்று கூறுவார்கள்.

தந்தையார் தாயாரிடம் கொடுத்து தாயார் மகனுக்குக் கொடுக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். இது ஒருவித பெயர் குறிப்பிடாத சமஷ்டி என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தாலும் உச்ச நீதிமன்றமோ ஒற்றையாட்சியின் ஒரு பரிமாணமே இது என்று தான் பதில் இறுக்கும். எங்களுடைய பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் இந்த வகையைச் சேர்ந்தது. தாயார் போல் ஆளுநர் இருந்தாலும் இயக்குவது தந்தையான அரசாங்கமே.

ஆகவே பெரும்பான்மையினரின் தற்துணிபின் பேரில் அவர்கள் அடக்கியாளக்கூடிய அதிகாரத்துடன் தயாரிக்கப்படுகின்ற எந்த ஒரு அரசியல் யாப்பும் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை அளிக்கமாட்டா. மாறாக முற்று முழுதாக சட்டப்படி வர்ணிக்கப்பட்டு தமிழர்க்குத் தரப்படும் அதிகாரங்கள் திரும்பிப்பெற முடியாதவையாக இருந்தால்த்தான் நாம் எதிர்காலத்தில் சுதந்திரமாக வாழமுடியும். நாங்கள் பிரிந்து போவோம் என்ற அச்சம் சிலரால் வெளிப்படுத்தப்படுகிறது. பிரிந்து போகாது இருக்க வேண்டுமானால் அதற்கு உரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கலாம். இந்தியா, இங்கிலாந்து என்று எந்த நாட்டிடமும் கோரி எம்முடன் உடன்படிக்கையின் மூலம் பிரிவினைக்கெதிரான ஒரு உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் எக்காலத்திலும் எம்மை நாமே ஆள வழிவிடுங்கள் என்பதே எமது கோரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு, சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டிக் கோரிக்கை என்பது இன்று நேற்று தொடங்கப்பட்டதல்ல. இலங்கை சுதந்திரம் அடைந்த ஒரு சில ஆண்டுகளிலேயே தந்தை செல்வநாயகம் அவர்களால் சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இச் சமஷ்டிக் கோரிக்கையினை 65 வருட காலமாகத் தொடர்ந்து தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் எம்மை நாமே ஆளும் சமஷ்டித் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது தமிழர் தலைமைகளுடைய கடமையாகும்.

அதைவிடுத்து வெறுமனே அரைகுறைத் தீர்வினை ஏற்றுக் கொள்வது எக்காரணத்தைக் கொண்டும் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்று. பிரச்சினையைத் தீர்ப்போம் எனக் கூறிக் கொண்டு ஒரு பெயரில் என்ன இருக்கின்றது என்று கூறிக் கொண்டு குறைந்தளவு அதிகாரப் பரவலாக்கம் ஒன்றுடன் இணங்கிச் செல்வதை விட தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் அவர்களது நீண்ட கால அரசியல் கோரிக்கைகளையும் முன்வைத்து உரிய தீர்வு வரும் வரை சளைக்காது முன்னெடுத்துச் செல்வது அவசியமானதொன்று என்றே நான் கருதுகின்றேன்.
மேலும் தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை அடைவதற்காக இதுவரை விலைமதிப்பற்ற தியாகங்களைச் செய்ததுடன் பல்வேறு இழப்புக்களையும் சந்தித்து வந்துள்ளனர். இத்தகைய நிலையில் தமிழ் மக்களது நீண்ட நாளைய அபிலாஷைகளையும் கோரிக்கைகளையும் இடை நடுவே கைவிடுவதற்கு எந்தவொரு தனிப்பட்ட தலைவருக்கோ அரசியல் கட்சிக்கோ அல்லது அமைப்புக்கோ உரித்தில்லையென நான் கருதுகின்றேன்.
சிலர் தேர்தல் காலம் வருகின்றது என்றோ என்னவோ பேரிகை கொட்டிப் பெரிய பேச்சுக்களில் ஈடுபட எத்தனித்துள்ளனர். நேர்மையுடன் மனச்சாட்சிப்படி அவர்கள் இவ்வாறான பயிற்சிகளில் ஈடுபடுகின்றார்கள் என்றால் நாம் அதை வரவேற்கின்றோம்.

மூன்றாவது முஸ்லீம்கள் பற்றியது. அண்மையில் மட்டக்களப்பில் “எழுக தமிழ்” கூட்டம் முடிவடைந்த பின்னர் முஸ்லீம் பள்ளிவாசல்கள் பலவற்றின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களுடன் கருத்துப் பரிமாற்றம் நடந்தது. முஸ்லீம்கள் வடக்கு , கிழக்கு இணைப்புக்கு எதிர் என்று சிங்கள மக்களும் தமிழ் மக்களில் சிலரும் கூறிக்கொண்டு திரிந்தாலும் உண்மையான பாரம்பரிய தமிழ்ப் பேசுங் கிழக்கு மாகாண முஸ்லீம்கள் அவ்வாறு சிந்திக்கவில்லை என்பதை அந்தக் கூட்டத்தின் போது தெரிந்து கொண்டோம். முஸ்லீம் மக்களுக்கு ஒரு போதுமான அலகைக் கொடுத்தால் வடகிழக்கு இணைப்புக்குத் தாங்கள் ஆட்சேபணை இல்லை என்ற விதத்திலேயே அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தன. இதனை நாம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பூகோள அரசியல் எம்மைத்தாக்குவது பற்றி ஆராய இருக்கின்றார்கள். இது மிக நுணுக்கமாகச் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம். மகிந்த இராஜபக்சவை வெளியேற்றியதில் வெளிநாட்டுச் சக்திகளின் பங்கேற்பு வெகுவாக இருந்தது. நாம் எமது உள்;ர் அரசியல் சிந்தனைகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கப் பிற நாடுகள் தமது நாட்டு நலன் விரும்பி நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

இறுதியாக அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளின் போக்குப் பற்றி பேச இருக்கின்றார்கள். பேசுவது எதுவாக இருந்தாலும் நடைமுறையில் எதனை இதுவரை சாதித்து விட்டோம் என்பது தான் முக்கியம். ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதிகளில் தமிழர் சார்பாக எவற்றையாவது முழுமையாக நிறைவேற்றியுள்ளார்களா என்ற கேள்விக்கு அரசாங்கம் பதில் தரவேண்டும். மேலும் இரண்டு வருடங்கள் தேவை என்று கோரி அதனையும் பெற்றுவிட்டார்கள். அப்படியிருந்தும் முன்னேற்றம் காணப்படுவதாகக் கூறமுடியாத நிலையே இன்றும் நிலவுகின்றது.
பயங்கரவாதச் தடைச்சட்டம் வாபஸ் பெறப்படவில்லை. இன்னமும் எமது இளைஞர்கள் வழக்குப் பதியப்படாமல் சிறைக்காவலில் இருக்கின்றார்கள். குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றையே வைத்து குற்றவாளிகள் ஆக்கப்பட்டவர்களும் அரசியல் ரீதியாகக் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு நீண்ட கால சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும் பொது மன்னிப்பில் வெளிவிடப்படவில்லை. மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. இராணுவம் குறைக்கப்படவில்லை. போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படவில்லை. காணாமல் போனோர் பற்றி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இப்படி இல்லை இல்லை என்று அரசாங்கம் செய்யாதவற்றைப் பட்டியல் போட்டுக்கூறலாம். ஆனால் மிக முக்கியமான தொன்றுண்டு. சர்வதேச உள்ளீட்டுடன் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்பதே அது.

எமது இராணுவ வீரர்களை விட்டுக் கொடுக்க மாட்டோம், அவர்களுக்கெதிராக விசாரணை செய்ய விடமாட்டோம் என்று அமைச்சர்கள் மட்டத்தில் ஜனாதிபதி மட்டத்தில் அடித்துக் கூறும் போது தமது இராணுவ வீரர்கள் யுத்த குற்றங்களில் கட்டாயமாக ஈடுபட்டிருந்தார்கள் என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றார்கள் தெற்கத்தைய அரசியல்த் தலைவர்கள். அது எமக்கு சார்பாக அமைகின்றது.
தற்போது தளபதி சரத் பொன்சேகா அவர்கள் ஜகத் ஜயசூரிய என்ற முன்னைய இராணுவத் தளபதி யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டார் என்பது பற்றி சாட்சியம் அளிக்கப்போவதாக பகிரங்கமாகக் கூறியுள்ளார். ஆகவே குற்றவாளிகள் தாமாகவே அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றார்கள். எனவே தான் சர்வதேச நீதிபதிகளுடன் யுத்தக் குற்ற விசாரணையானது விரைவில் நடைபெற வேண்டும் என்று கோருகின்றோம். ஜனாதிபதி தமது போர்வீரர்களை எப்படியும் காப்பாற்றுவோம் என்று கூறும் போது உள்;ர் நீதிபதிகள் உரியவாறு நீதியைப் பெற்றுத் தருவார்கள் என்று நாங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?

அதேபோல் காணாமல் போனோரின் விடயமும் இதனோடு சம்பந்தப்பட்டதே. குற்றம் இழைத்தவர்கள் தப்பிக்கவிடக்கூடாது. இன்றிருக்கும் நிலையில் காணாமல்ப் போனோர் பற்றி இந்த அரசாங்கம் எந்த ஒரு திடமான நடவடிக்கையையும் எடுக்காது என்பது தென்றெனத் தெரிகின்றது. எமது மக்களின் தொடர் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதங்கள் போன்றவை எந்தவிதப் பலனையும் அளிக்கவில்லை.
ஆகவே சர்வதேச உள்ளீடல்களுடனான விசாரணை ஒன்றே எமக்கு நீதியைப் பெற்றுத் தரும். உண்மையை வெளிக் கொண்டுவரும்.

முன்னைய தளபதி ஜகத் ஜயசூரிய பற்றி ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் கூறியிருப்பது யுத்தக் குற்ற விசாரணைகள் உரியவாறு நடைபெறுமோ என்ற நப்பாசையை எழுப்பினாலும் தற்போதைய அரசியல்வாதி சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் அரசியல் பால் பட்ட கருத்துக்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. அத்துடன் அவர் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற கசப்பான அனுபவங்களின் பிரதிபலிப்பு என்பதையும் நாங்கள் மறந்துவிடக் கூடாது. உண்மையான சர்வதேச உள்ளீடல்களுடனான விசாரணை விரைவாக நடைபெறவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலிந்து கேட்டுக் கொள்கின்றோம். ஜெனிவாவில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நாம் அவர்களுக்கு நினைவூட்டுகின்றோம்.
அரசியல் யாப்பைப் பொறுத்த வரையில் எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் எமக்குத் திருப்பித் தரப்பட வேண்டும். இதைத் தான் உச்ச நீதிமன்றப் பேச்சொன்றில் பல வருடங்களுக்கு முன்னர் நான் கூறியிருந்தேன்;. மாணவர்களாக நாங்கள் இருந்த போது எமது சிரேஷ்ட மாணவர்கள் மாபிள்கள் 25ஐ எம்மிடம் இருந்து பறித்துவிட்டு “இந்தா ஐந்து மாபிள்கள்”;, “இந்தா எட்டு மாபிள்கள்;” என்று பேரம் பேசுவார்கள். அதே போன்று எமது உரித்துக்களைப் பறித்து விட்டு இது தருவோம் அது தருவோம் என்று பேரம் பேசுகின்றது அரசாங்கம் என்று கூறியிருந்தேன். எல்லா மாபிள்களும் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்றேன். தமிழ் மக்களின் சகல உரித்துக்களும் அதிகாரங்களும் எமக்குத் திருப்பித்தரப்பட வேண்டும்.

98 வருடங்களுக்கு முன்னர் 1919ம் ஆண்டில் பிரதேச பிரதிநிதித்துவம் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால்த்தான் சிங்கள மக்களின் பெரும்பான்மைக் குணவியல்பு எம்மை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கவைத்தது. அதுவரையில் இன ரீதியான பிரதிநிதித்துவமே வெள்ளையர் காலத்தில் இருந்து வந்தது. அதாவது ஒவ்வொரு இனத்திற்கும் ஓரிருவர் பிரதிநிதித்துவம் அளித்தார்கள். பிரதேச பிரதிநிதித்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது கூடிய பிரதேசங்கள் சிங்கள மக்கள் சார்ந்து இருந்ததால் அவர்களின் தொகை பெரும்பான்மையாகி அக் காலகட்டத்தில் இருந்து சிங்களப் பெரும்பான்மை ஆதிக்கம் எம்மைச் சூழ்ந்து கொண்டது.

பெரும்பான்மைத் தீர்மானம் என்பது ஒரே விதமான ஒரே மக்களின் நடுவே ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதொன்று. வௌ;வேறு விதமான மக்களினிடையே, பல்லின, பன்மொழி, பல்சமய மக்களிடையே, பெரும்பான்மைத் தீர்மானம் என்பது சிறுபான்மையினரைக் கட்டுப்படுத்தும் கைவிலங்காய் மாறிவிட வாய்ப்பிருக்கின்றது. இதை அறிந்தே ஆங்கிலேயர்கள் முதல் அரசியல் யாப்பில் பிரிவு 29ஐ உள்ளடக்கி சிறுபான்மையினருக்குத் தகாத எந்த ஒரு சட்டத்தையும் பெரும்பான்மையினர் கொண்டுவந்து அவர்களுக்கு இடர் விளைவிக்கக் கூடாது என்று கூறினார்கள்.

ஆனால் 1956ம் ஆண்டில் அந்த சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் “சிங்களம் மட்டும்” சட்டம் கொண்டுவரப்பட்டது, அது பிரிவு 29ன் ஏற்பாடுகளுக்கு முரணாக அமைந்தது. அந்த முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி “சிங்களம் மட்டும்” சட்டம் சட்ட வலுவற்றது என்று கோடீஸ்வரன் வழக்கில் டி க்ரெட்சர் என்ற நீதியரசர் தீர்ப்பு வழங்கினார். அதனை மேன்முறையீடு செய்து பின்னர் கோமறைக்கழகம் என்ற ப்ரிவி கௌன்சிலுக்கு மேன்முறையீடு செய்து அரசாங்கம் காலத்தைத் தாக்காட்டிக் கொண்டிருந்த போது தான் 1972ம் ஆண்டின் குடியரசு அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்டது. அதிலே தான் பெரும்பான்மையர் பலம் பதிக்கப்பட்டது. அதற்குதவியவர் மாணவர்களாக நாங்கள் இருந்த போது எமது மதிப்பிற்குரியவராக விளங்கிய கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா அவர்கள். அந்த அரசியல் யாப்புடன் அவர் மீதிருந்த எமது மதிப்பு யாவும் சரிந்துவிட்டது, கரைந்துவிட்டது. ஒரு மொழி என்றால் இரு நாடுகள் இரு மொழி என்றால் ஒரு நாடு என்று 1956ல் கூறிய தீர்க்கதரிசி கலாநிதி கொல்வின்ஆர்டிசில்வா. அரசியல் காரணங்களுக்காகப் பெரும்பான்மையினரின் சார்பு நபராக மாறியமை எம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்தியது.

பதவி மோகமே இதைச் செய்தது என்று கூறலாம்.
அதே பதவி மோகம் எமது தமிழ்த் தலைவர்களையும் பீடிக்கக்கூடாது என்பதே எமது பிரார்த்தனை. அதைத் தந்து இதைத் தந்து எம்மை வாங்கிப்போடுவது தெற்கத்தையருக்குக் கைவந்த கலை.
தெற்கில் எனது சிங்கள நண்பருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை எழும். ஓரிரு வாரங்களில் அது சரியாகிவிடும். என்ன செய்தாய் என்று எனது சிங்கள நண்பரிடம் கேட்டால் ளாயிந பண்ணிவிட்டேன் என்று பதில் வரும். “ளூயிந” என்ற சொல்லில் தான் அவர்கள் பலம் அடங்கியிருக்கின்றது. சாம, பேத, தான, தண்டம் எல்லாவற்றையும் பாவித்து ளாயிந பண்ணி விடுவார்கள்.

நான் ஒருமுறை அப்போதைய பிரதம நீதியரசருடன் வெளிநாட்டுப் பணிக்கூடம் ஒன்றிற்குச் சென்றுவந்தேன். வந்து இருவாரங்களில் அமெரிக்கா செல்ல வாய்ப்பொன்று நீதியரசர்களுக்குக் கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் பிரதம நீதியரசரின் சில நடவடிக்கைகளுக்கு எதிராக நான் கருத்துக்கள் தெரிவித்திருந்தேன். என்னை ளாயிந பண்ணுவதற்கு அவர், “நீங்கள் அமெரிக்கா செல்லுங்கள்” என்றார். “இல்லை பாகிஸ்தான் போய் வந்துவிட்டேன் எனக்கடுத்த நீதியரசரே இந்தப் பயணத்தில் செல்ல வேண்டும்” என்றேன். “நான்தானே தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்டவன். நீங்கள் போகலாம்” என்றார். “வேண்டாம் முறைப்படியே அடுத்தவருக்கு அந்தச் சந்தர்ப்பத்தை வழங்குங்கள்” என்று கூறிவிட்டு அவ்விடத்தில் இருந்து அகன்றுவிட்டேன். இப்படித் தான் ளாயிந என்பது நடக்கின்றது. நெத்தலி போட்டுச் சுறாப்பிடிப்பதில் வல்லவர்கள் அவர்கள். எம்மவர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தந்து தந்து கவிழ்க்கக்கூடியவர்கள் அங்குள்ள அரசியல் வாதிகள். நாங்கள் எமது கோரிக்கைகளில் மிகவும் விழிப்பாக, மிகவும் கெட்டியாக இருக்காவிட்டால் எம்மைத் தம்வசம் மாற்றி விடுவார்கள்.

ஒரு உதாரணம் கூறுகின்றேன். பேராசிரியர் ஊ.சுந்தரலிங்கம் அவர்கள் மிகப்பெரிய அறிஞர், அறிவாளி, அரசியல்வாதி. பட்டங்கள் பல பெற்றவர். ஆனால் னு.ளு.சேனாநாயக அவர்கள் அக்கால ளுளுஊ கூட பாஸ் பண்ணினாரோ நான் அறியேன். “நீங்கள் தான் கெட்டிக்காரர். உங்களை விட யாருமில்லை” என்று னு.ளு.சேனாநாயக கூறியதும் “சிங்களவர் மட்டும்” அமைச்சரவை (Pயn ளுinhயடய ஊயடிiநெவ) ஒன்றினை எவ்வாறு அமைப்பது என்று பேராசிரியர் சுந்தரலிங்கம் அவர்களே னு.ளு. சேனாநாயகவுக்கு அடி எடுத்துக் கொடுத்தார். எமது நிறைகளையும் குறைகளையும் உன்னிப்பாகக் கவனித்து எம்மை வீழ்த்துவதில் எமது தென்னவர், தமிழ் நாட்டில் கூறுவது போல் “பலே கில்லாடிகள்”.

இதனை இங்கு ஏன் கூறுகின்றேன் என்றால் அறிவு வேறு; சாமர்த்தியம் வேறு என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எம்மிடம் அறிவு உள்ளது, ஆற்றல் உள்ளது. திறமை உள்ளது. ஆனால் எந்த அளவுக்கு சாமர்த்தியம் உள்ளது என்பதை நீங்களே பரிசீலித்துப் பார்த்து கொள்ள வேண்டும். நான் இவ்வாறு கூறுவதால் நான் என்னிடம் சாமர்த்தியம் இருக்கின்றது என்று கூறவரவில்லை. அவ்வாறான அரசியல் சாமர்த்தியம் என்னிடம் இல்லை என்பதை வெளிப்படையாகவே நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால் மற்றவர்களின் சாமர்த்தியத்தை அடையாளம் காணும் அருகதை எனக்குண்டு என்பதை நான் ஏற்றுத்தான் ஆக வேண்டும். சிங்கள மக்கட் தலைவர்களிடம் சாமர்த்தியம் உள்ளது. அதே போல் காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமானிடம் சாமர்த்தியம் இருந்தது. ஆகவே அதை உணர்ந்து நாங்கள் எங்கள் காய்களை நகர்த்த வேண்டும். அதற்கு எமது அடிப்படைகளில் விடாப்பிடித்தன்மையும் எம்முள் ஒற்றுமையும் அத்தியாவசியம். தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் எமது அடிப்படைகளை அறிந்து ஒற்றுமையுடன் எமது இயக்கத்தைக் கொண்டு செல்ல முன்வரவேண்டும்.

எமக்கு ஆதரவாக அண்மையில் தரப்பட்ட சமஷ்டி பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைகின்றது. அவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் சமஷ்டி பற்றிப் பேசுவது தகாததென்றும் எம்மவர் இனிக் கூறத்தேவையில்லை. அந்தத் தீர்ப்பை முன்வைத்தே எமது காரியங்களை நாம் முன் நடத்திச் செல்ல வேண்டும். வேண்டுமெனில் அந்தத் தீர்ப்பை சிங்களத்தில் மொழிபெயர்த்து உங்கள் சிங்கள நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி விடுங்கள். அடுத்து ஜகத் ஜயசூர்ய பற்றி தளபதி சரத் பொன்சேகா அவர்கள் அண்மையில் கூறிய கூற்றும் எம்மால் கவனத்திற்கு எடுக்கப்பட்டு யுத்தக் குற்றங்கள் நடை பெற்றமைக்கு போதிய ஆதாரம் அவர் கூற்றில் பொதிந்திருக்கின்றது என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். வேண்டுமென்றால் முன்னர் நாங்கள் திரு.சரத் பொன்சேகா அவர்களுக்கு வாக்குப் போட்டதை நினைவுபடுத்தி அவர் இன்று செய்வது, அவர் சொல்வது சரியென்று எடுத்துரைக்க வேண்டும். அவர்களிடையே இருக்கும் வைர்யத்தை எமக்குச் சார்பாக நாம் பாவிக்க வேண்டும். தெற்கில் அவரின் கொடும்பாவி எரிக்கின்றார்கள் என்றால் வடக்கில் அவரின் படத்திற்கு மாலை போhட வேண்டும். இவற்றை நாம் பகிரங்கமாகக் கூறுவது பாதிப்பளிக்கலாம். ஆனால் மக்களுக்கு அரசியல் ஞானத்தை அறிமுகப்படுத்தும் போது எவ்வாறு நாங்கள் நடந்து கொள்ள முடியும் என்பதை வெளியிடுவது நன்மையே பயக்கும் என்று நம்புகின்றேன்.
மக்களுக்கு அரசியல் அடிப்படைகளை அறிவிக்கும் இந்தக் கூட்டம் மகத்தானது. இதிலிருந்து எமது சாதாரண மக்களின் அரசியல்ப் பங்களிப்பு ஆக்க பூர்வமாக ஆரம்பமாகின்றது. தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகள் வெற்றிமேல் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தித்து “அனைத்தும் அவன் செயல்” என்று கூறி எனது பேச்சை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்