அனிதா அஞ்சலி நிகழ்வில் அமீர் – ரஞ்சித் இடையே கருத்து மோதல்

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் சார்பில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு உரிமை ஏந்தல் நிகழ்வு ந‌டைபெற்றது. அதில், இயக்குநர்கள் அமீருக்கும், பா.ரஞ்சித்திற்கும் இடையே முரண்பட்ட கருத்து ஏற்பட்டது. அதனால், சிறிது நேரம் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் சார்பாக சென்னை வடபழனியில் உரிமை ஏந்தல் நிகழ்வு நடைபெற்றது. அதில், ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை கூறி வந்த நிலையில், இயக்குநர் அமீர் சாதி, மத பேதங்களை மறந்து, கடந்து தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும் என்ற வகையில் பேசினார். தமிழன் என்பதே பெருமை என்றும் அவர் கூறினார். அதனால், அதிருப்தியடைந்த இயக்குநர் பா.ரஞ்சித், அமீரிடமிருந்து மைக்கைப் பறித்து ஆவேசமாக பேசினார்.

சாதி வேறுபாடுகள் தமிழகத்தில் மலிந்துகிடக்கும் நிலையில், தமிழன் என்று பொதுவா‌கக் கூறி ஏமாற்றக் கூடாது என்றும், அனிதாவின் மரணத்தை வைத்தாவது நம்மை நாம் சுய பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என்றும் பா.ரஞ்சித் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேடையிலும், பார்வையாளர்கள் மத்தியிலும் அமீருக்கும், ரஞ்சித்திற்கும் ஆதரவாக குரல்கள் எழுந்ததால், இருவரையும் இயக்குநர் ராம் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

வேறுபாடுகளை ஒழித்து, ஒற்றை அடையாளத்தை நோக்கிய பயணத்தை இன்றைய சமூகம் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அனிதாவிற்கான உரிமை ஏந்தல் கூட்டம் நிறைவுபெற்றது.

https://www.facebook.com/Eeladhesamcom/videos/1444715952272468/

நன்றி புதியதலைமுறை

About இலக்கியன்

மறுமொழி இடவும்