ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் போர்க் குற்ற ஆதார விவகாரத்தை ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.
எனவே நாளை ஆரம்பிக்கப்பட உள்ள மனித உரிமைப் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் அனைத்துலக குற்றவியல் விசாரணைப் பொறிமுறைக்குள் இலங்கையை உள்வாங்குவதற்கான அழுத்தங்களும் வலியுறுத்தல்களும் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
ஜெனீவாவிலுள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையிலான குழு ,கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தலைவர் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றவு ள்ளனர். இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் விவகாரங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட வில்லை.
ஆனால் ஐ. நா. வின் சிறப்பு அந்தஸ்துடைய சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இலங்கை குறித்து கேள்விகள் எழுப்புவதற்காக வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
பொதுவான விவாதங்களில் பல்வேறு தலைப்புக்களின் கீழ் உரையாற்றவுள்ள சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையின் பொறுப்புக்கூறல் , காணாமல் போனோர் மற்றும் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் என பல்வேறு விடயங்கள் குறித்து கேள்விகளை முன்வைத்து அனைத்துலகத்தின் வலியுறுத்தல்களுக்கான சூழலை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இலங்கையிலிருந்து ஜெனீவா செல்லும் மனித உரிமை செயற்பாட்டு பொது அமைப்புக்கள் உபகுழுக் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்கவுள்ள நிலையில் ,இது மிகவும் நெருக்கடியான நிலைமைகளை உருவாக்கக் கூடும் என்றும் அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் , சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் இலங்கை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பும் என்றும் கூறப்படுகின்றது.
குறிப்பாக அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தலைமையிலான, மனித உரிமை அமைப்புகள் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக போர்க் குற்ற வழக்கை தாக்கல் செய்துள்ளன.
2007ஆம் ஆண்டு தொடக்கம் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற 2009ஆம் ஆண்டு வரை ஜெனரல் ஜெகத் ஜயசூரிய வன்னிப் படைகளின் தளபதியாக செயற்பட்ட நிலையில், வவுனியாவில் உள்ள ஜோசப் முகாமில் இருந்து இவர் இராணுவ நடவடிக்கையை மேற்பார்வை செய்ததாக போர்க் குற்றவழக்கில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவின் மேற்பார்வையில் இருந்த இராணுவப் பிரிவுகளால், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும், காணாமல் ஆக்கப்பட்டதாகவும், சித்திரவதை செய்யப்பட்டதாகவும் இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே நாளை திங்கட் கிழமை ஆரம்பிக்கப்பட உள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இந்த விடயம் தொடர்பில் இலங்கைத் தரப்பினரிடம் கேள்விகள் முன்வைக்கப்படலாம்.
அதே போன்று ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இறுதிக்கட்ட போரில் குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகளால் ஜெனீவாவின் கவனத்திற்கு கொண்டுவரப்படலாம் என்ற அச்சம் இலங்கைத் தரப்பிற்கு உள்ளது.
இதேவேளை, சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் பல்வேறு உபகுழுக் கூட்டங்களை ஜெனீவா வளாகத்தில் நடத்தவுள்ளன.
இதன் போது இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
எனவே நிகழ்ச்சி நிரலில் இலங்கை குறித்த விவகாரம் காணப்படா விடினும் வலியுறுத்தல்களும் கேள்விகளும் நெருக்கடியான நிலைமையை உருவாக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.