சாவகச்சேரியில் வீடுபுகுந்து வாள்வெட்டு அண்ணன்-தங்கை உள்ளிட்ட மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுளைந்த பத்திற்கு மேற்பட்டோர் மேற்கொண்ட வாள் வீச்சில் மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

குறித்த வீட்டினுள் நேற்று இரவு 8:40 மணியளவில் நுழைந்த பத்திற்கு மேற்பட்ட கும்பல் வீட்டில் இருந்த சுஜிவன் மீது கொலைவெறியுடன் வாளால் வெட்டப்பாய்ந்தனர். இதனை அவதானித்த சுஜிவனின் சகோதரி தாக்குதலை தடுக்க முற்பட்டுள்ளார். இதில் அண்ணன்-தங்கை இருவரும் படுகாயமடைந்துள்ளார்கள்.

இந்த கொலைவெறித் தாக்குதலையடுத்து வீட்டில் உள்ளவர்கள் எழுப்பிய அபயக்குரல் கேட்டு உதவிக்கு வந்த அயலவர் ஒருவரையும் வாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்கள்.

இச்சம்பவத்தில் கிராம்புவில் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் சுஜிவன் (வயது 30), பரமேஸ்வரன் சுஜித்தா (வயது 27) மற்றும் ஜெயரத்தினம் சிறிராஜ் (வயது 30) ஆகியோர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் தலையில் பலத்த காயமடைந்த பரமேஸ்வரன் சுஜிவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஈழதேசம் இணையத்தள செய்தியாளர் மு.காங்கேயன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்