வெலிக்கடை சிறையில் திடீர் தேடுதல் வேட்டை!

வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்றுப் பிற்பகல் 1 மணி தொடக்கம் 3 மணி வரை திடீர் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு முறைகேடுகளும் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் உத்தரவின் பேரில் இந்த திடீர் தேடுதல் நடத்தப்பட்டது.

சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த தேடுதலின் போது இரண்டு கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றில் சிறைச்சாலை மருத்துவமனைச் ஒன்று சுவர் ஒன்றுக்கு அருகே வீசப்பட்ட நிலையில் கிடந்தது. இன்னொன்று மருத்துவமனை மேசை ஒன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறைச்சாலைக்குள் கைபேசி கொண்டு செல்லப்படுவதற்கு சாத்தியமில்லை என்றும், சிறைஅதிகாரிகளின் உதவியுடனேயே இவை கைதிகளுக்கு கிடைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைத்து அரசியல் கைதிகள் மற்றும் கைதிகளிடம் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் கைதிகளும், பொய்க்காரணம் கூறி சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால், இனிமேல் 3 மருத்துவ அதிகாரிகள் பரிசோதித்து, பரிந்துரை செய்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர் என்ற புதிய நடைமுறை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

600 மில்லியன் ரூபா அரச நிதி மோசடி வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள லலித் வீரதுங்க, அனுஷ பல்பிட்ட ஆகியோர் உடனடியாகவே சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து, சிறிலங்கா அரசாங்கம் சிறைச்சாலை மருத்துவமனை நடைமுறைகளை கடுமையாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்