த.தே.கூ.ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை கூட்டுமாறு சிவசக்தி ஆனந்தன் எம்.பி அவசர கடிதம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் அவர்களுக்கு ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் அவசர கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாராளுமன்ற குழு கூட்டம் தொடர்பான உங்களது அறிவித்தல் கடிதம் கிடைத்தது. அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாகவும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு புதிய அரசியல் யாப்பு வரவிருக்கின்ற சூழலில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் 20ஆவது திருத்தம் மற்றும் வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை ஆகியவை கொள்கை முடிவுடன் தொடர்புபட்டிருப்பதால் பாராளுமன்ற குழு கூட்டம் கூடுவதற்கு முன்பாக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தைக் கூட்டி அங்கத்துவக் கட்சிகளின் கருத்தறிந்து அதற்கேற்ப முடிவெடுப்பதே சிறப்பானதாக இருக்கும்.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எட்டப்படுகின்ற முடிவுகளுக்கேற்ப பாராளுமன்ற குழுவைக் கூட்டி அனைவரும் ஒரு நிலைப்பாட்டிற்கு வருவதே சரியானதாகவும் சிறந்த ஜனநாயக செயல்முறையாகவும் இருக்கும். ஆகவே தாங்கள் விரைவாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோருகிறது.

எமது கோரிக்கையை ஏற்று செயற்படுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதன் பிரதிகள் பங்காளிக்கட்சித் தலைவர்களான மாவை சோ. சேனாதிராஜா, செல்வம் அ. அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்