வடக்கில் முஸ்லிம்களுக்காக முன்னிற்று செயற்படுவேன் – மாவை உறுதி!

வடக்கு மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் வீடமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுக்க முன்னின்று செயற்படுவேன் என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா உறுதியளித்துள்ளார்.

முஸ்லிம் மக்களுக்கு உதவுவதற்கான காலம் இப்போது உருவாகியுள்ளதாகவும், அவ்வாறானதொரு நிலைப்பாட்டினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்கொண்டிருப்பதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். கிளிநொச்சி முஸ்லிம்களின் பணிமனையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் வீடற்று இருக்கும் முஸ்லிம் மக்கள் பிரதி நிதிகளுடனான சந்திப்பு நேற்று யாழ், கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் பணிமனையின் தலைவர் மௌலவி சுபியான் தலைமையில் நடை பெற்றது.

இச்சந்திப்பின்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு உறுதியளித்தார்.

அத்துடன், தமிழரசுக் கட்சியானது தமிழ் – முஸ்லிம் உறவை கட்டிக்காக்க தொடர்ந்தும் போராடி வருவதாகவும், அதற்காக முஸ்லிம் சமூகமும் ஒன்றிணையவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கை.சரவணபவன் உட்பட முஸ்லிம் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்