தமிழ் மக்களுக்காக பட்டினி கிடந்து தன் உயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் முப்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் ஐந்தாம் நாள் வணக்க நிகழ்வு இன்று நல்லூரில் அவரது நினைவுத் தூபியில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் உட்பட பல மாணவர்கள் நேரில் சென்று திலீபனின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்ட பின்னர், அவர்களின் ஆட்சி அமைதியாகிய 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இம்முறை தியாகி திலீபனுக்கு யாழ்.குடாநாட்டு மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திலீபன் உயிர்நீத்த நல்லூர் வளாகத்தில், நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற் பின்னால் அமைக்கப்பட்டிருந்த அவரது நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்ட நிலையில், அதன் எச்சசொச்சத்தில் அவரது நினைவேந்தல் இடம்பெறுவது சிறப்பானதாகப் பார்க்கப்படுகின்றது.