தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலமே முஸ்லிம் காங்கிரஸ் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்.
எனவே அந்தக் கட்சியுடன் சேர்வதுதான் பொருத்தமாகும். இவ்வாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மையக் குழு உறுப்பினருமான கலீல் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாயின் மூன்று மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டும். நமது எதிரிகள் முழுமையாகத் தோற்கின்ற நிலை இதன் மூலம் உருவாகும்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இந்த நாட்டு சிறுபான்மையின முஸ்லிம்களின் உரிமையை வென்றெடுக்கும் இயக்கமாகும். இந்த இயக்கத்தைப் பதவி ஆசை பிடித்த வர்களால் ஒருபோதும் அழித்துவிட முடியாது.
கொழும்பு அரசிலும், மாகாணத்திலும் ஆட்சியில் இருக்கின்றோம். மக்களுக்கான வேலைத்திட்டங்களைக் கட்சியின் பதவியில் உள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள் சிறந்த முறையில் முன்னெடுத் துச் செல்ல வேண்டும்.
இன்று கட்சி ஆதரவாளர்கள் பலரும் விரக்தி நிலையில் உள்ளனர். தங்களுக்குக் கிடைக்கின்ற வசதிகளையும், வரப்பிரசாதங்களையும் கட்சிப் போராளிகளின் நலனில் பயன்படுத்தாது இருக்கின்றனர்.
குறிப்பிட்ட சிலர்தான் அதிகாரப் பதவியிலும், கட்சியின் அமைப்பாளர் பதவியிலும் இருப்பதால் கட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியாது.
எல்லோருக்கும் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். எல்லாம் அவர்கள்தான் என்ற நிலையை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
நமது தலைவரின் கரங்களைப் பலப்படுத்திக் கட்சியை அழிக்க நினைக்கும் சதிகாரர்களுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்ட கட்சிப் போராளிகள் களத்தில் இறங்க வேண்டும் – – என்றார்.