சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்களில் தற்போதைய அரசு என்றாலும் சரி, இனி வர போகும் அரசுகள் என்றாலும் சரி பொறுப்புக்கூறல் என்பதை செய்ய போவதே இல்லை. ஆகையால் தான் இலங்கை விடயத்தை பாதுகாப்பு சபைக்கு அனுப்பி குற்றவியல் விசாரணை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். என கோருகின்றோம் என ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பொறுப்பாளர் பிரான்சிஸ்கோ மொட்டோவிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
இருவருக்கும் நேற்றைய தினம் மனிதவுரிமை பேரவையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணையாளர் கடந்த 2015 ஆண்டு இலங்கை தொடர்பிலான அறிக்கையை வெளியிடும் போது, உள்ளக விசாரணை இலங்கையில் சாத்தியமில்லை. முப்பது வருடகால இனப்பிரச்சனையால் இலங்கையின் நீதித்துறை நம்பகத்தன்மையை இழந்துள்ளது. இதனால் தான் கலப்பு விசாரணை ஒன்று வேண்டும் என மனிதவுரிமை ஆணையாளர் வலியுறுத்தி இருந்தார்.
எனினும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை பேரவை நாடுகள், இலங்கையின் குற்றங்களை விசாரணை செய்ய கலப்பு பொறிமுறை ஏற்புடையது எனவும், இந்த பொறிமுறைக்கான முழு பொறுப்பும் இலங்கையினுடையது எனவும் கூறியிருந்தன. எனினும் சர்வதேச நாடுகளை எந்த வகையில் சேர்த்து கொள்வது என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இதே போன்று இலங்கை தொடர்பில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் கலப்பு பொறிமுறை என்ற விடயம் இல்லை. ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் மட்டும் தான் கலப்பு விசாரணை என சொல்லியிருக்கின்றார். எனினும் கலப்பு விசாரணை நடைபெற போவதில்லை என்பது வெளிப்படையான விடயம். அதனை இலங்கை அரசாங்கமே கூறி வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை மீது சர்வதேச விசாரணையே வேண்டும் எனவும், அதன் மூலமே இலங்கையை பொறுப்புக்கூறலில் ஈடுபட வைக்க முடியும் என வலியுறுத்தி வந்திருந்தார். எனினும் புதிய ஆணையாளராக செய்ட் அல் ஹீசையின் வந்த பின்னர் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதே இல்லை. இந்த நிலையில் தான் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம், அது தற்போது இருக்கும் அரசாங்கம் என்றாலும் சரி இனி வர போகும் அரசுகள் என்றாலும் சரி, பொறுப்புக்கூறல் என்பதை செய்ய போவதே இல்லை. ஆகையால் தான் இலங்கை விடயத்தை பாதுகாப்பு சபைக்கு அனுப்பி குற்றவியல் விசாரணை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். அல்லது ஐ.நாவின் பொறுப்பில் சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசு வாக்குருதியளித்த நிலையில், அந்த சட்டத்தை இன்று வரை நீக்க நடவடிக்கை எடுக்காமல், அதனை விட மோசமான ஒரு சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளை கூட, இந்த சட்டத்தை வைத்து மீண்டும் மீண்டும் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்கும் வேளைகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகின்றது. என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருந்தார். இதனை அடுத்து பதிலளித்த ஐ.நாவிற்கான ஆசிய பசுபிக் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பொறுப்பாளர், ஐ.நாவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இரண்டு வருட கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு வருட நிறைவில் அரசின் செயற்பாடுகள் ஏமாற்றமழிக்கின்றது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பதவியில் இருக்கும் போது தான் இந்த தாமதம் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும் புதிய வெளிவிகார அமைச்சர் திலக் மாரப்பனவின் காலத்திலும் எந்த முன்னேற்றங்களும் இல்லை. இந்த விடயங்கள் ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் வரவுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் என கூறியிருந்தார். எனினும் மார்ச் மாதம் வர போகின்ற அறிக்கை ஐ.நா பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு ஒரு தெளிவான ஆலோசனையை அறிவுறுத்தலை வழங்குவதாகவும் அழுத்தம் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் வலியுறுத்தியிருந்தார்.
சிறீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை பரிந்துரை செய்ய வேண்டும். ஐ.நா.ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார் முழக்கம்
Posted by Eeladhesam Tv on Mittwoch, 20. September 2017