தீர்வு வரும் வராமல் போகலாம். நாங்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க இருவரும் தமது கட்சி உறுப்பினர்களை ஒழுங்காக – முறையாக வழிநடத்த வேண்டும். இனிமேல்தான் முக்கிய தருணங்கள் இருக்கின்றன.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம், பொது வாக்கெடுப்பில் வெற்றி பெறக்கூடிய சூழல் இருக்குமாயின் நாம் அந்தச் சந்தர்பத்தை விட முடியாது. நிதானமாக – பக்குவமாக விடயங்களைக் கையாள வேண்டும். வாயைப் பொத்திக் கொண்டு விடயங்களை நகர்த்த வேண்டும்.
அரசமைப்புத் தொடர்பில் மகிந்தவுடன் பேசினேன். தமிழ் மக்களின் தீர்வுக்கு பல்வேறு உறுதிகளை இந்தியாவுக்கு நீங்கள் (மகிந்த) வழங்கினீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டினேன். அதனைச் செய்யவில்லை என்பதையும் கூறினேன்.
தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கின்றது. இந்தியா எங்களைக் கைவிட முடியாது. கைவிடவும் மாட்டாது.
13ஆவது திருத்தச் சட்டத்தில் எமக்கு உடன்பாடு இல்லையாயினும், அதை முற்றாக நிராகரிக் முடியாது. அது எமக்கான இறுதித் தீர்வும் அல்ல. புதிய அரசமைப்பில் ஒற்றையாட்சியைக் கைவிடுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ளது. 13ஆவது திருத்தத்திலிருந்து எவ்வளவோ தூரம் நாம் முன்னேறி வந்துள்ளோம். புதிய அரசமைப்பில் நூறு வீதம் திருப்தி இல்லையாயினும், அதில் எவ்வளவோ முன்னேற்றமான விடயங்கள் உள்ளன. தற்போது நாடாளுமன்றத்துக்கு வருவது இடைக்கால அறிக்கைதான்.
கூட்டாட்சி என்று நாம் சொற்களில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. உலகில் பல நாடுகளில் எந்தப் பெயரும் இல்லாமல் அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்கின்றன. நாம் கிடைத்துள்ள சந்தர்பத்தை தவறவிடக் கூடாது – என்றார்