சிறிலங்காவின் அரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேனா அவர்கள், நியு யோக்கில் உள்ள ஐ.நா பொதுமன்றின் முன்னால் குற்றவாளிக் கூண்டொன்றில் ஏற்றப்பட்டுள்ளார்.
001-17 வழக்கு எண்ணுக்கு அமைய, அனைத்துலக சிவில் சமூகம் சிறிலங்காவுக்கு எதிராக வழக்கினைத் தொடுத்திருந்தது.
தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு நடத்திய இனப்படுகொலை தொடர்பிலான ஆதரங்களை முன்வைத்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வழக்குரைஞர்கள் முன்வைத்துள்ளனர்.
இனப்படுகொலையின் சாட்சியங்களாக பொதுமக்கள் சூழந்திருந்தனர்.
இவ்வாறு ஐ.நா பொதுச்சபையின் 72வது கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்த வேளை, ஐ.நாவின் முன்னால் மாதிரி குற்றவிசாரணை கூண்டில் அமைத்து கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதனை ஒருங்கு செய்திருந்தது.
ஐ.நாவின் முன்னால் பல்லின மக்களும் கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டிருந்த வேளை, இவ்வாறு மாதிரி விசாரணை மையமாக தமிழர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் பலரது கவனத்தினைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா எனும் அரசுக்கு அதிபராக மைத்திரபால சிறிசேனாவே இருக்கின்ற நிலையில் சிறிலங்கா ஒரு குற்றவாளி நாடு என அடையாளப்படுத்தும் வகையில், மைத்திரி குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருந்தார்.
மைத்திரபால சிறினோவினை அடையாளப்படுத்தும் வகையில் அவரது முகம் பதிக்கப்பட்ட முகமூடியுடன் ஒருவர் குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்தார்.
சிறிலங்கா அரசு மீதான தமிழினப்படுகொலை குற்றச்சாட்டுக்களை வழக்குரைஞர்களாக வேடம் அணிந்திருந்தோர் அடுக்கினர்.
பலரது கவனத்தினைப் பெற்றிருந்த இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் உரையாற்றியிருந்தார்.