தமிழ் தலைமைகள் அரசாங்கத்திடம் விலைபோய்விட்டன – கபே

வட-கிழக்கு தமிழ் தலைமைகள் தமது அற்பசொற்ப ஆசைகளுக்காக சிறிலங்கா அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாகவும், இதனால் வட-கிழக்கில் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படும் என சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் கபே அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்களின் அற்பசொற்ப எதிர்பார்ப்புக்களுக்காக உள்ளூராட்சிகள் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி திருத்தங்களைக் கொண்டுவந்ததினால் வடக்கு, கிழக்கில் பாரியளவான பாதிப்புக்கள் ஏற்படப்போகின்றன.

இதனை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சரிவர புரிந்து வைத்திருந்தார் எனத் தெரிவித்த கீர்த்தி தென்னக்கோன் தற்போது தமிழர்களின் அரசியல் ஆலோசகராக இருக்கும் சுமந்திரன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விலைபோயுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பல மாதங்களாக இழுபறிநிலையிலிருந்த உள்ளூராட்சித் திருத்தச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறியுள்ளது. எனினும் இத்திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுவதாக பல அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளபோதிலும் தமிழரசுக் கட்சி ஆதரவாக வாக்களித்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், குறைபாடுகளுடன் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அதிருப்தி வெளியிட்ட அதேவேளை, தமிழ்த் தலைமைகளை சிறிலங்கா அரசாங்கம் விலைகொடுத்து வாங்கிவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

“சிறிலங்கா நாடாளுமன்ற வரலாற்றில் பின்கதவால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட முதலாவது சட்டமாக உள்ளூராட்சிகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமாக அடையாளமிடப்படுகின்றது. இது ஜனநாயக விரோத மற்றும் முறையற்ற சட்டமாகும். குறிப்பாக துரதிஷ்டவசமாக தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைக்கு இடையிலான 60, 40 வீத வித்தியாசம் இறுதி தருணத்தில் சபையில் வாக்கெடுப்பு நடத்தவிருந்த 15 நிமிட சொற்ப நேரத்திலேயே 50க்கு 50ஆக மாற்றப்பட்டுள்ளது.

இந்த விகிதத்திற்கு கொண்டுவந்தமைக்கான காரணம், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், றிஷாத் பதியூதீன் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தேவைகளை நிறைவேற்றவே ஆகும். அவர்களது வாக்குகளற்ற நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமற்போன சூழ்நிலை உருவாகியிருந்தது.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு அம்மூவரது கோரிக்கையான 50க்கு 50 என்ற திருத்தம் சட்டமூலத்திற்கு உள்வாங்கப்பட்டது. இந்த திருத்தத்துடன் விகிதாசார தொகுதிவாரியுடன் சேர்த்த பின்னர் நடக்கும் ஒருவிடயம் இருக்கிறது. அதுதான் நாட்டில் பரந்துவாழும் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகளுக்கு எப்போதுமே கிடைக்காத நன்மையொன்று கிடைக்கும். இந்த சட்டமூலத்திற்கு திருத்தங்கள் பின்கதவால் கொண்டுவந்து நிறைவேற்ற செலுத்தப்பட்ட விலை அதிகமாகும்.

இதனால் வடக்கு, கிழக்கிலேயே அதிக அநீதி ஏற்படும் என்று கூறுகின்றோம். அரசியல் கட்சிகளுக்கு தத்துவாசிரியர்கள் உள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவருக்கு அன்ரன் பாலசிங்கம் இப்பதவியிலிருந்தார். ஆனால் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தத்துவாசிரியராக இருக்கும் சுமந்திரன், அந்தக் கடமையை சம்பந்தனுக்கு செய்யாமல் ரணிலுக்கே நிறைவேற்றினார்.

இது இனவாத அறிவிப்பல்ல. இந்த நாட்டில் சட்டத்தை பற்றி நன்கு தெரிந்தவர்களும், மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் சட்டத்தை சரிவர நிறைவேற்றுவோம் என குரல் கொடுத்தவர்கள் நாடாளுமன்றத்தில் இப்போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கீழே கண்களுக்கு எவ்வாறு மண்ணைத்தூவுகிறது என்று ஆலோசனை கூறுபவர்களாக மாறிவிட்டனர்” என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்