கடந்த காலங்களில் இருந்து இன்று வரை தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள், மனித உரிமைகள் அனைத்தும் இனவாத சிங்கள அரசால் நசுக்கப்பட்டுள்ளன. நசுக்கப்பட்டு வருகின்றன. ஐ.நா. வின் அன்றைய அறிக்கைகளே அதற்குச் சாட்சி. தமிழர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் பார்த்து எவரும் கண்ணீர் சிந்துவா்.
இவ்வாறு இந்தியாவின் ம.தி.மு. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நேற்றுச் சிறப்புரை ஆற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது:
ஐ.நா. அறிக்கையின் படி 2009 மார்ச் மாதம் காயப்பட்ட தமிழர்கள் இருந்த மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டது.
அங்கிருந்த தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2009 ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி லண்டன் தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி வெளிப்படுத்திய காட்சி, குருதியை உறையச் செய்யும்.
தமிழ் இளைஞர்கள் எட்டுப் பேர்களின் கைகளைப் பின்புறமாகக் கட்டி, கண்களைக் கட்டி, இழுத்துச் சென்று, நிலத்தில் மண்டியிட வைத்து, உச்சந்தலையில் சுட்டார்கள். துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. அவர்களது தலைகள் சிதறி, குருதி நிலத்தில் சிந்தியது.
2010 டிசெம்பர் 2 ஆம் திகதி அதே சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய சம்பவம் மிகவும் கொடூரமானது. சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களின் நிர்வாண உடல்கள் சிதறிக் கிடந்தன. விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இளநங்கை இசைப்பிரியா 15 சிங்களச் சிப்பாய்களால் கொடூரமாக வன்புணர்வுக்கு உட்டுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆடைகள் எதுவும் இல்லாத அந்த அபலைப் பெண்ணின் உடல் சேற்றில் வீசப்பட்டது.
பாதுகாப்பு வலயத்துக்குக் கொண்டு வரப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களுள் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் குண்டுவீச்சால் கொன்று குவிக்கப்பட்டனர். கர்ப்பிணித் தமிழ்ப் பெண்களின் வயிறுகளை சயனைட் கத்தியால் குத்திக் கிழித்து, ஐந்த மாத, ஆறு மாதக் கருக்களை மண்ணில் தூக்கி எறிந்தனர்.
இந்த மிருகத்தனமான படுகொலைகள் சுட்டிக்காட்டும் உண்மை யாதெனில், தமிழர்களின் மனித உரிமைகளை ஆயிரம் அடிக்குக் கீழே சிங்கள அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது.
மனித உரிமை உறுப்பு நாடுகளை இரு கரங்களைக் கூப்பி வேண்டுகிறேன். இலங்கை அரசு இழைத்த மனித உரிமைகளை சுதந்திரமான அனைத்துலக நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்.