வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இந்த ஆட்சிக் காலத்துக்குப் பின்னர் அவருக்கு எந்தக் காரணம் கொண்டும் ஆதரவளிப்பதில்லை என்று ரெலோ அமைப்பு தீர்க்கமாக முடிவு செய்துள்ளது. முதல்வரின் தற்போதைய பதவிக் காலம் வரைக்கும் மட்டுமே ஆதரவளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. வவுனியாவில் நேற்று நடைபெற்ற அந்தக் கட்சியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
அந்தக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ந.சிறிகாந்தா, ஹென்றி மகேந்திரன், பிரசன்னா இந்திரகுமார், கோவிந்தன் கருணாகரம், விந்தன் கனகரட்ணம், வினோநோதராதலிங்கம் உள்ளிட்ட 15 பேர் கொண்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் விடயங்கள் அலசி ஆராயப்பட்டன. இதன்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இந்தப் பதவிக் காலம் முடிவடையும் வரையில் (அடுத்த ஆண்டு ஒக்ரோபர் மாதம்) ரெலோ முழுமையான ஆதரவையும் – ஒத்துழைப்பையும் வழங்குவது என்றும், அதன் பின்னர் அவருக்கு ஆதரவு வழங்குவதில்லை என்றும் முடிவு செய்துள்ளது.