இரவு விடுதியொன்றிலிருந்து 15 வயதான சிறுமியொருவர், வெலிக்கடைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சிறுமி, குறித்த விடுதியில் ஏனைய பெண்களுடன், அரை நிர்வாணமாக நடனமாடி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே, இவர் மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்தச் சிறுமி பாடசாலை மாணவி என்பதுடன், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என, அறிந்துக்கொள்வதற்காக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிறுமி தனக்கு பழக்கமான 18 வயதுடைய இளைஞர் ஒருவருடன் திருமண வைபவமொன்றுக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என, அவர்களது பெற்றோர் பொலிஸாரில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சிறுமி இரவு விடுதியொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்பின்னர், வெலிக்கடைப் பொலிஸார் விடுதியை சுற்றிவளைத்து சிறுமியை மீட்டதுடன் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு, தும்மலசூரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த இரவு விடுதியிலிருந்து விபசார தொழில் ஈடுபட்டுவந்த, 5 பெண்கள் மற்றம் 10 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, வெலிக்கடைப்பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.