யுத்த காலத்தில் தாம் ஒப்படைத்த தங்க நகைகள் தமக்கு இதுவரை கிடைக்கவில்லையென வடக்கு, கிழக்கு மக்கள் தெரிவித்தனர்.
அதிக பெறுமதியுடைய தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த தங்க நகைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 04 ஆம் திகதி முன்னாள் அரசாங்கம் 2,379 பேருக்கு அவர்களின் தங்க நகைகளை மீளக்கையளித்தது.
எனினும் அதிகப் பெறுமதியுடைய, அதிக எடை கொண்ட தங்க நகைகளைத் தாம் ஒப்படைத்த போதிலும் சொற்ப அளவு நகையே தமக்கு கிடைத்ததாக மக்கள் குறிப்பிட்டனர்.
தங்க நகைகளைத் தாம் ஒப்படைத்தமைக்கான பற்றுச்சீட்டுகளும் தம்மிடம் காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, யுத்த காலத்தில் மீட்கப்பட்ட தங்கம் தொடர்பில் தொடர்ந்தும் தகவல்களைத் திரட்ட வேண்டியுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது.
அதற்காக இராணுவத்தின் விசேட பிரிவொன்று செயற்படுவதாகவும் இலங்கை இராணுவம் குறிப்பிட்டது.