பிரான்சு லாச்சப்பலில் தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் உள்ளிட்ட புரட்டாதி மாத மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு!

தியாக தீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபன், கேணல் சங்கர் மற்றும் புரட்டாதி மாதம் வீரகாவியமான தேசப் புதல்வர்களின் நினைவு வணக்க நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் நேற்று 26.09.2017 செவ்வாய்க்கிழமை பாரிசு லாச்சப்பல் பகுதியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தியாக தீபம் திலீபன் அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 03.12.2007 கரிப்பட்டமுறிப்பில் வீரச்சாவடைந்த வீரவேங்கை யாழ்நம்பியின் சகோதரியும் மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை 26.06.1989 அன்று வவுனியாவில் வீரச்சாவடைந்த கப்டன் ரூபனின் சகோதரியும் கேணல் சங்கர் அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 01.03.2009 அன்று வீரச்சாவடைந்த வீரவேங்கை வினிதனின் சகோதரனும் ஏற்றிவைத்து மலர்மாலை அணிவித்தனர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றன. ஆசிரியர் பாஸ்கரன் அவர்களின் கவிதையும் இடம்பெற்றது. தொடர்ந்து எதிர்வரும் 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு ஆர்யொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள திடலில் இடம்பெறவுள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு, நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

About இலக்கியன்

மறுமொழி இடவும்