வட-கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் தலைமைகள் இணக்கம் தெரிவித்தால் அவர்களுக்கு தனி அலகு வழங்கத் தயார் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளிவந்த நிலையில் அது தொடர்பாக வெளிவரும் விமர்சனங்கள், வட-கிழக்கு இணைப்புக்கெதிராக முஸ்லிம் தலைவர்களால் வெளியிடப்படும் கருத்துக்கள், இடைக்கால அறிக்கை தொடர்பாக முன்னாள் ஆட்சியாளர்மகிந்த ராஜபக்ஷவின் கருத்துக்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் சமூகம் ஜனநாயகம் மறுதலிக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வரும்வேளையில் ஆட்சிமாற்றமொன்றினை எதிர்பார்த்திருந்தனர்.
அதேபோன்று தான் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படவேண்டுமென்ற தோற்றப்பாடும் சர்வதேச நாடுக ளில் எழுந்திருந்தது. இவ்வாறான பின்னணியில் தான் ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தினை தோற்றுவித்து ஆட்சிபீடத்தில் அமர்ந்தார்கள். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், பொறுப்புக்கூறும் விடயத்திலும் உள்நாட்டிலும், ஐ.நா.விலும், சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை வழங்கினார்கள்.
அதனடிப்படையில், தமிழ் மக்களின் பங்களிப்புடன் புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டது. இவ்வறிக்கையில் அனைத்துத் தரப்பினரதும் முன்மொழிவுகள் பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது இறுதியான அறிக்கை அல்ல.
இது அரசியல் யாப்பின் ஆரம்பப்புள்ளியே. இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்தும் கலந்துரையாடல்களைச் செய்யவுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுள்ளது. இணைந்த வடக்கு கிழக்கில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வொன்றையே எதிர்பார்த்து மக்கள் எமக்கு வாக்களித்தனர்.
ஆகவே எமது அடிப்படைக் கோட்பாடுகளுடன் ஒப்பீட்டளவில் பார்க்கையில், இடைக்கால அறிக்கையில் பல முன்னேற்றங்களை அடையவேண்டியுள்ளது. குறிப்பாக அதிகாரப் பகிர்வு என்ற விடயம் இடம்பெறவேண்டியுள்ளது. இது தொடர்பாக அனைத்துத் தரப்பினர்களுடனும் கலந்துரையாடவுள்ளோம்.
குறிப்பாக வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாக முஸ்லிம் தலைவர்களுடன் பேசி வருகின்றோம். வடக்குக் கிழக்குஇணையும் பட்சத்தில் முஸ்லிம் மக்களுக்கு நியாயமான அதிகாரங்கள் பகிரப்படும் வகையில் தனியலகு அமைக்கும் கோரிக்கையை நாம் நிராகரிக்கவில்லை. அதனை நாம் வழங்கத் தயாராகவே உள்ளோம் எனத் தெரிவித்தார்.