நாம் கொள்கையிலிருந்து விலகவும் மாட்டோம். அதே நேரம் அரசியல் தீர்வுக்காக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தையும் நழுவ விடவும்மாட்டோம்” என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார்.
உதயவாழ்வு மற்றும் சரவணபவன் அறக்கட்டளையின் பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் சாதனையாளர்கள் மதிப்புறுத்தலும் வட்டுக்கோட்டையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் திருமதி யசோதை சரவணபவன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா மேலும் தெரிவித்ததாவது:
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான இடைக்கால அறிக்கையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் மற்றும் இணக்கம் காணப்படாத விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வெளிவந்திருப்பது இடைக்கால அறிக்கை மாத்திரமே. இன்னும் முழுமையான தீர்வுத் திட்டம் வரவில்லை. அது விரைவில் வரவிருக்கின்றது.
இந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன. புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதற்கான சந்தர்பத்தை உருவாக்கியுள்ளோம். அதனை நாம் தவறவிடக் கூடாது. சில விடயங்களை மாத்திரம் வைத்து ஒட்டுமொத்த தீர்வையும், நன்மைகளையும் எழுந்தமானமாக நாம் நிராகரிக்கக் கூடாது. இடைக்கால அறிக்கை தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என்று கூறவில்லை.
நாம் இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த இலக்கை அடைவதற்காக நாம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்திருக்கின்றோம். அந்த ஆத்மாக்கள் உலாவுகின்ற இந்தத் தேசத்தில் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்பத்தை நாம் தவறவிட முடியாது – என்றார்.