சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் எந்தவித நிபந்தனையு மின்றி உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட் கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா மையப் பேருந்து நிலையம் முன்பாக மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வவுனியா மாவட்ட பொது அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை ஒழுங்கமைத்துள்ளன.
வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை அவரது இல்லத்தில் நேற்று மாலை 3 மணியளவில் சந்தித்தனர்.
சந்திப்பில் வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கம், சமூக அமைப்புக்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், மகளிர் அமைப்புக்கள், கிராம அமைப்புக்கள் என 20இக்கும் மேற்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் ஒரு அவசர சந்திப்பு ஒன்றை இன்று (நேற்று) ஒழுங்கமைத்தன.
அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் மூவர் கடந்த 11 நாள்களாக உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு எதிரான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றிலிருந்து அநுராதபும் மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதனால் மொழி உள்பட பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் தமக்கு எதிரான வழக்கு விசாரணையை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றிலேயே நடத்தப்பட வேண்டும் என்பதை வலியறுத்தியுமே அவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போனோர் விவகாரம் மற்றும் காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக வவுனியா மாவட்டத்தில் பொது அமைப்பு ஒன்றை உருவாக்குவதாக இந்தக் கலந்துரையாடலின்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.
எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய பல்வேறுபட்ட நடைமுறை ரீதியான பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்திய போராட்டங்களை வெறுமனவே ஓர் கட்சி சார்பு இல்லாமல் ஒட்டுமொத்தமான பொது அமைப்புக்களையும் உள்ளடக்கிய அமைப்பு ஒன்றின் ஊடாக முன்னெடுக்கப்படும்.
இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.