இந்திய அமைதிப் படை புலிகளைத் தவறாகக் கணித்துவிட்டது

இந்திய அமைதிப்படையும் ஏராளமான அறிவுஜீவிகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தவறாகக் கணித்துவிட்டனர் என, மனித உரிமை ஆர்வலர் கோபாலசிங்கம் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.

போர்க் காலத்தில் தங்களுக்கு அச்சுறுத்தல் எனக் கூறி நாட்டைவிட்டு வெளியேறிச் சென்ற மனித உரிமை ஆர்வலர்கள் எனக் கூறப்படும் தயா சோமசுந்தரம், ராஜன் ஹூலே மற்றும் கோபாலசிங்கம் ஸ்ரீதரன் ஆகியோரிடம் நேரடிச் சந்திப்பு எனக் கூறி இந்தியப் பத்திரிகையான த ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்படிக் கருத்துக் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் போர் தீவிரம் பெற்றபோது அனைத்து தரப்பினரும் இழைத்த மனித உரிமை மீறல்களை மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் நால்வர் ஆவணப்படுத்தினர் எனவும் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதால் மூவர் நாட்டை விட்டு வெளியேறினர் எனவும் கூறப்படுகின்றது.

தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களிடம் இந்தியாவில் இருந்து வெளிவரும் த ஹிந்து பத்திரிகை நிருபர் நேர்காணல் செய்தால் எனக் கூறி அப்பத்திரிகை செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு,

இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கி சுமார் 5 ஆண்டுகள் கழித்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்வியாளர்கள் பலர் இணைந்து 1988 இல் மனித உரிமை அமைப்பை (யுனிவர்சிட்டி டீச்சர்ஸ் போர் ஹியூமன் ரைட்ஸ்) தொடங்கினர்.

குறிப்பாக பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பிரிவுத் தலைவராகப் பணியாற்றிய ரஜனி திரநகம, ராஜன் ஹூலே, கோபாலசிங்கம் ஸ்ரீதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகிய 4 பேரும் இந்த அமைப்பின் முகமாக விளங்கினர்.

வெளிநாட்டில் தத்துவப் படிப்பை (டொக்ட்ரேட்) முடித்த இந்த இளம் கல்வியாளர்கள், எந்த நாட்டுப் பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் பேராசிரியர்களாக பணியாற்றி இருக்கலாம். ஆனால், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதற்காக 1980களில் மீண்டும் இலங்கைக்கே திரும்பி உள்ளனர்.

கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிராக 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த கலவரத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். சுமார் ஓர் இலட்சம் பேர் புலம் பெயர்ந்தனர்.

இதையடுத்து, தமிழர்களுக்கு ஆதரவாக பல கிளர்ச்சிக் குழுக்கள் வளரத் தொடங்கின. ஆயுதம் ஏந்திய இக்குழுக்கள் தங்கள் இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்ததுடன் பயிற்சியும் வழங்கத் தொடங்கின.

ஒருபுறம் இராணுவத்துக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் சண்டை நடந்த நிலையில், தலைமை தாங்குவது தொடர்பாக கிளர்ச்சிக் குழுக்களுக்குள்ளேயே மோதல் வெடித்தது. இதனால், தமிழ் சமுதாயமே மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது என இந்த நான்கு பேரும் முடிவு செய்தனர்.

இராணுவமோ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் கிளர்ச்சி குழுக்களோ யாராக இருந்தாலும் அவர்கள் நிகழ்த்திய மனித உரிமை மீறல் சம்பவங்களை இவர்கள் ஆவணப்படுத்தினர். முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தகவல்களைத் திரட்டி, அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்தினர்.

இவர்கள், யாருமே விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராகச் செயல்படவில்லை. மாறாக, காயமடைந்த புலிகளுக்கு, திரநகம மருத்துவ உதவி செய்தார். இலங்கை அரசு இரக்கமற்றதாக மாறியதால், இவர்களைப் போன்ற தமிழ் அறிவாளிகள் அவ்வாறு மாறவில்லை. தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஓர் அரசு போலவே நடத்தினர்.

கணிதவியலாளரான கோபாலசிங்கம் ஸ்ரீதரன், மாணவ பருவத்திலேயே இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தவர். அவர் கிளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தபோதும் ஆயுதம் ஏந்திய போராட்டத்திலிருந்து விலகி நின்றார்.

அவர் கூறும்போது, ‘என்ன நடக்கும் என்று நினைத்தேனோ அது நடக்கவில்லை’ என்றார்.

மனநல நிபுணரான தயா சோமசுந்தரம் கூறும்போது,

‘உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தை எட்டி இருந்தது. தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, பொதுமக்கள் இங்கும் அங்கும் ஓடினர். போதிய உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. சாலைகளில் மக்கள் செத்து மடிந்தார்கள். பலர் காயமடைந்தனர். இந்த நிலையில்தான் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது’ என்றார்.

இலங்கை உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 1987 இல் அங்கு சென்ற இந்திய அமைதிப்படை, விடுதலைப்புலிகள் அமைப்பைத் தவறாகக் கணித்துவிட்டதாக இவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஸ்ரீதரன் கூறும்போது, ‘எதற்காக இங்கு வந்தீர்கள் என இந்திய அமைதிப்படையினரிடம் கேட்டேன். அப்போது அவர்கள் அளித்த பதிலில் தமிழர்களின் நலன் என்பது கடைசியாகத்தான் இருந்தது. அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் இங்கு வந்தார்கள் என்பதுதான் உண்மை.

24 மணி நேரத்தில் விடுதலைப் புலிகளை சரணடைய வைத்து விடலாம் என எண்ணினார்கள். அது நடக்கவில்லை. விடுதலைப் புலிகளைப் பற்றி அவர்கள் தவறாக கணித்துவிட்டார்கள். இந்திய இராணுவம் மட்டுமல்ல, ஏராளமான அறிவுஜீவிகளும் இந்த விவகாரத்தில் தோற்றுப் போனார்கள்’ என்றார்.

இதனிடையே, 1989 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதி மாலை பல்கலைக்கழகத்திலிருந்து வீடு திரும்பியபோது, திரநகம தனது வீட்டுக்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து கொலை மிரட்டல் காரணமாக, மற்ற 3 பேரும் நாட்டை விட்டு வெளியேறினர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்தபடி, இலங்கைப் போர் பற்றி தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர்.

இதுகுறித்து ஸ்ரீதரன் கூறும்போது, ‘ 1980கள் மற்றும் 1990களில் நாங்கள் வெளியிட்ட பகுப்பாய்வுகள் இறுதியில் நிஜமானதை கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால், பேரழிவையும் மனித உயிரிழப்பையும் எங்களால் தடுக்க முடியாமல் போய்விட்டது.

எங்களைப் போன்ற ஒரு சில நபர்களால் இதற்கு மேல் என்ன செய்திருக்க முடியும். எனினும், குற்றம் செய்ததாகவே நான் உணர்கிறேன். அந்தக் காலத்தில் நாடு திரும்பி என்னால் முடிந்ததைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமாகவில்லை. இதில் நான் தோற்றுவிட்டேன்’ என்றார்.

இதேவேளை, மேற்படி நபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

து ஹிந்து பத்திரிகை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கும் எதிரான கருத்துக்களை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்த விடயம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்