யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெற உள்ள தேசிய தமிழ் மொழித் தின விழாவில் சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால கலந்து கொள்ளவுள்ள நிலையில் அந்த நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் புறக்கணிப்பார் என்று தெரிகிறது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்துகொள்ளமாட்டார்கள் என்றும் கூறப்பட்டது. அவர்களில் சிலர் தாம் நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என்பதை ஏற்கனவே தொலைநகல் மூலம் அறிவித்துவிட்டனர் என்றும் உதயன் அறிந்தான்.
அநுராதபுரம் சிறையில் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் ஈடுபட்டுள்ள நிலையில் அதற்கு ஒரு தீர்வை அரச தலைவர் வழங்காமல் இருப்பதை அடுத்தே அவரது நிகழ்வைப் புறக்கணிக்க சம்பந்தரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முடிவெடுத்துள்ளனர் என்று தெரிகிறது.
எதிர்க் கட்சித் தலைவரின் புறக்கணிப்புத் தொடர்பில் பகிரங்கமான ஊடக அறிவிப்புக்கள் எவையும் விடுக்கப்படவில்லை. எனினும் சனிக்கிழமை யாழ்ப்பாண நிகழ்வுக்காக அன்றைய தினத்தில் வேறு எந்த நிகழ்விலும் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்த அவர், நேற்று அத்தகைய வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்குச் சம்மதித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்திருந்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கான நேரமும் ஒதுக்கப்படவில்லை.
இதனை அடுத்தே அரச தலைவரின் நிகழ்வில் கலந்துகொள்ளாமல் இருப்பது என்கிற இறுக்கமான முடிவை சம்பந்தர் எடுத்திருப்பார் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
நிகழ்வில் தான் பங்கேற்கமாட்டார் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்றைய தினமே தொலைநகல் ஊடாக அறிவித்தார் என்று அறிய முடிந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்றைய தினம் அறிவிக்கவுள்ளனர் என்றும் அறியவந்தது.
இதேவேளை, அரச தலைவரின் வருகையையொட்டி தேசிய தமிழ்த் தின விழா நடைபெறும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்றுமுதலே போடப்பட்டுள்ளன. ஆயுதம் தாங்கிய படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.