எதிரிக்கே உணவளித்த தமிழீழ விடுதலைப் புலிகள்…..

யாழ்ப்பாணக் கோட்டை மாறி மாறி பல களங்களைக் கண்ட கோட்டையாகும். போர்த்துக்கேயரிலிருந்து ஒல்லாந்தர், ஆங்கிலேயர், இந்திய இராணுவம், இலங்கை இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் என பல இராணுவ அணிகளையும் வெடிகுண்டுகளையும் சுமந்த ஒன்றாகும்.

ஈழப்போர் தொடங்கிய காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்தது யாழ்ப்பாணக் கோட்டை. இந்திய இராணுவத்தினரும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரும் கோட்டையில் முகாம் அமைத்திருந்த காலத்தில் கோட்டையிலிருந்து கண்மூடித்தனமான தாக்குதல்களினைத் தொடுத்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் 1986ஆம் ஆண்டு கப்டன் கொத்தலாவல தலைமையில் ஸ்ரீலங்கா இராணுவம் யாழ் கோட்டையில் முகாமிட்டிருந்தபோது யாழ் நகரத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. கோட்டையிலிருந்து வெளிப்படும் இராணுவத்தினர் கண்ணில் அகப்படுவோரையெல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் கோட்டையை எப்படியாவது கைப்பற்றியே ஆகணும் என்ற நிர்ப்பந்தம் விடுதலைப் புலிகளிடத்தில் எழுந்தது. அதற்கென திட்டமும் வகுக்கப்பட்டு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் கிட்டுவின் தலைமையில் முற்றுகை அணியொன்று தயாரானது.

கேணல் கிட்டுவின் தலைமையில் நடந்த முதலாவது கோட்டை முற்றுகையானது ஸ்ரீலங்கா இராணுவத்தை வெளியேற்றுவதற்கானதல்ல, அவர்களை வெளியில் வரவிடாமல் கோட்டைக்குள்ளேயே முடக்குவதற்கானதே. இந்த நிலையில் முற்றுகைத்தாக்குதல் ஆரம்பமானது.

அப்பொழுதுதான் விடுதலைப் புலிகளிடம் 50-கலிபர் இயந்திரத் துப்பாக்கி பாவனைக்கு வந்திருந்தது. பெரும்பாலும் உலங்கு வானூர்திகளைத் தாக்கும் திறனை 50-கலிபர் கொடுத்திருந்தது.

கோட்டை முற்றுகையின்போது கோட்டைக்குள் முடங்கியிருந்த இராணுவத்திரருக்கு உணவு விநியோகம் தடைப்பட்டது. அதற்கு காரணம் புலிகளிடமிருந்த கலிபர் துப்பாக்கிதான். உணவு மற்றும் ஆயுதங்களை விநியோகம் செய்த உலங்கு வானூர்திகளை கோட்டைக்குள் இறங்க விடாமல் புலிகளின் 50-கலிபர் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தது.

இது இராணுவத்துக்கு பாரிய நெருக்கடிகளைக் கொடுத்தது. கடைசிவரை கோட்டைக்குள் ஒரு உலங்கு வானூர்துகூட இறங்கமுடியாத நிலை ஏற்பட்டது. இறுதியில் கப்டன் கொத்தலாவல புலிகளிடம் பணிந்துபோனார். தாக்குதல்களை நிறுத்திவிட்டு கேணல் கிட்டுவை வாக்கிடோக்கி மூலம் தொடர்புகொண்டார்.

அவரின் குரல் கரகரத்தது, தாம் குடிநீர் மற்றும் நல்ல உணவின்றி, சமைக்க விறகுமின்றி தவிப்பதாகவும் ஏராளமான இராணுவத்தினர் மிகுந்த பசியோடு இருப்பதாகவும், தமக்கு உணவு விநியோகிக்கும் உலங்கு வானூர்திகளை தரையிறங்க அனுமதிக்கும்படியும் கேட்டார்.

கொத்தலாவலவின் வார்த்தைகளைக் கேட்ட கிட்டு இரக்கம் கொண்டார். “உங்களுக்கு வேண்டிய குடிநீர், உலர் உணவுப் பொருட்கள் மற்றும் விறகும் நான் போராளிகளிடம் அனுப்பி வைக்கிறேன். உங்கள் இராணுவத்தை தாக்குதல் மேற்கொள்ளவேண்டாம் என சொல்லுங்கள். மற்றும்படி உலங்கு வானூர்தியை அங்கே தரையிறங்க அனுமதிக்கமாட்டேன்” என்றார் கிட்டு. இதற்கு சம்மதித்த கப்டன் கொத்தலாவல கிட்டுவுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.

அதன்பின்னர் ஒரு பார ஊர்தியில் பாண், கோதுமை மா, அரிசி, குடிநீர், மற்றும் விறகு போன்றவற்றை இரண்டு போராளிகள் மூலம் அனுப்பி வைத்தார். மீண்டும் கிட்டுவுடன் வாக்கிடோக்கியில் தொடர்புகொண்ட கப்டன் கொத்தலாவல மகிழ்வோடு நன்றி சொன்னார். அன்றுடன் கோட்டையிலிருந்து தாக்குதல்களை மேற்கொள்வதை கப்டன் கொத்தலாவல நிறுத்திக்கொண்டார்.

நாட்டின் ஏனைய பாகங்களில் கடும் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோதும் யாழ்ப்பாணம் முற்றவெளியில் கப்டன் கொத்தலாவலவும் கேணல் கிட்டுவும் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர். சடலங்களும் கைதிகளும் பரஸ்பரம் யாழ்ப்பாணக் கோட்டையின்மூலம் பரிமாறப்பட்டது.

பின்னர் யுத்த நிறுத்தம் ஏற்பட்டபோது கப்டன் கொத்தலாவலை யாழ் நகரில் இருந்தவிடுதலைப் புலிகளின் முகாமுக்கு தனது ஒரு சில இராணுவத்தினருடன் வந்து தளபதி கிட்டுவைச் சந்திக்க விரும்பினார். ஆனால் அப்போது கிட்டு அங்கே இல்லை தனது காலில் ஏற்பட்ட பெருங் காயத்துக்கு சிகிச்சைக்காகவும், செயற்கைக் கால் போடும் நோக்கத்துடனும் தமிழ் நாட்டில் இருந்தார்.

அப்போது கப்டன் கொத்தலாவல முகாமிலிருந்த போராளிகளிடம், ”புலிகள் பயங்கர வாதிகள் என்று நினைத்திருந்த எனது எண்ணத்தை முறியடித்தவர் தளபதி கிட்டுதான். புலிகள் மனச்சாட்சியும், மனித நேயமும் உள்ளவர்கள்” என்று சொல்லிவிட்டு திரும்பினார்.

இதன்பின்னர், சில வருடங்களில் கப்டன் கொத்தலாவல ஸ்ரீலங்கா இராணுவத்தில் இருந்து விலகி வெளிநாடு ஒன்றுக்கு சென்று குடியேறியமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்