மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப். மாலதி அவர்களின் 30வது வீரவணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் விழித்தெழுவோம் என்ற நிகழ்வும் டென்மார்க்கில் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது.
விழித்தெழுவோம் நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. 2ம் லெப். மாலதி, லெப்.கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மக்கள் சுடர், மலர் வணக்கம் மாவீரர்களுக்கு செலுத்தினார்கள். அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
மேடை நிகழ்வானது எழுச்சி கானங்களோடு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கவிதைகள், பேச்சுகள், மாவீரர்களின் வீரத்தை உணர்த்தும் எழுச்சி நடனங்கள், தாயக மக்களின் அவலங்களை எடுத்துரைக்கும் நாடகங்கள் என்பன நடைபெற்றன.
டென்மார்க் மகளிர் அமைப்பினரால் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையும் வாசிக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை தொடர்ந்து “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தமிழர்களின் தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.