வறுமையில் வடக்கே முதலிடம்

சிறிலங்காவில் வறுமை நிலை குறைந்துள்ள போதிலும், வடக்கு மாகாணத்தில் வறுமை நிலை அதிகளவில் உள்ளதாக சிறிலங்காவின் சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அதிகாரபூர்வ தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களுக்கு அமைய, 2012/13, காலப்பகுதியில், 6.7 வீதமாக இருந்த சிறிலங்காவின் வறுமை நிலை, கடந்த ஆண்டில், 4.1 வீதமாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டில், 4,166 ரூபாவுக்கு உட்பட்ட தனிநபர் ஒருவரின் மாதாந்த செலவினம், வறுமைக் கோட்டு எல்லையாக அதிகாரபூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2012/13 இல், 3,624 ரூபாவாக இருந்தது.

2012/13இல், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 1.3 மில்லியனாக இருந்த வறுமை நிலையில் இந்தவர்களின் தொகை, 2016இல், 843,913 ஆக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, மொத்த குடும்பங்களின் எண்ணிக்கையில், 3.1 வீதமான (169,392) குடும்பங்கள் வறுமை நிலையில் உள்ளன.

அதிகபட்சம் வறுமை நிலை சுட்டெண்ணைக் கொண்டதாக கிளிநொச்சி மாவட்டமும், குறைந்தபட்ச வறுமை நிலை சுட்டெண்ணைக் கொண்டதாக கொழும்பு மாவட்டமும் காணப்படுகின்றன.

கண்டி மாவட்டத்திலேயே வறுமை எல்லைக்குக் கீழ் உள்ள மக்கள் அதிகளவில் உள்ளனர். மன்னார் மாவட்டத்தில், வறுமை எல்லைக்கு கீழ் உள்ள மக்கள் குறைந்தளவில் உள்ளனர்.

மாகாண அடிப்படையில், குறைந்தபட்ச வறுமை சுட்டெண்ணைக் கொண்டதாக மேல் மாகாணம் உள்ளது. இங்குள்ள மொத்த மக்கள் தொகையில், 1.7 வீதமானோர் (101,342) வறுமை நிலையில் உள்ளனர்.

வடக்கு மாகாணம் அதிகபட்ச வறுமை சுட்டெண்ணைக் கொண்டதாக உள்ளது. இங்கு, 7.7 வீதமான மக்கள் ( 83,834) வறுமை நிலையில் உள்ளனர்.

மாவட்ட அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தில், அதிகபட்சமாக வறுமை நிலை 12.7 வீதமாக உள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்