இன்று வவுனியாவில் மனித சங்கிலிப் போராட்டம்!

அனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய்யகோரியும் வவுனியா மேல் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த அரசியற் கைதிகளுக்கெதிரான வழக்கை இடமாற்றியமைக்கு எதிராக அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கம் அரசியல் கைதிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கை விசாரணை செய்யகோரியும் இன்று(2) பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியா கச்சேரிக்கு முன்பாக நடைபெற இருக்கும் மனித சங்கிலிப் போராட்டத்தில் பொது மக்களை கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்துமாறு அனைவரையும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுக்கின்றது என அமைப்பின் வவுனியா மாவட்ட செயலாளர் சு.டோன்பொஸ்கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகளை அடைவதற்கு போராடியவர்களை பயங்கரவாத நடவடிக்கை என மீண்டும் மீண்டும் அரசு வலியுறுத்திக் கொண்டே செல்கின்றது.

அக்கோரிக்கையை முன்வைத்துப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யப்பட்ட போதிலும் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கானோர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அநீதியானதாகும்.

ஏற்கனவே பல தடவைகள் ஆயுதங் தாங்கிப் போராடியவர்களை அரசு விடுதலை செய்து தேசிய நீரோட்டத்தில் இணைத்துள்ளது கடந்த கால மஹிந்த அரசாங்கம் போல நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதாக கூறி பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமும் இவ் அரசியற் கைதிகளை விடுதலை செய்வதை தொடர்ந்து மறுத்து வருகின்றது.

கடந்த நான்கு ஆண்டுகளாக வவுனியா மேல் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த சந்தேக நபர்களுக்கெதிரான விசாரணைகள் அனுராதபுரம் நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டமை நீதித்துறை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகும். கடந்த எட்டு வருடங்களாக வட பகுதியிலும் இயல்பு வாழ்கை, பாதுகாப்பு பலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அரசாங்கம் கூறிவருகிறது.

எந்தவிதமான அச்சுறுத்தல்களோ, ஆயுதப் போராட்டஙங்களோ இல்லாத போதிலும் சட்டமா அதிபர் சாட்சிகளின் பாதுகாப்புக் கருதி அனுராதபுரம் நீதி மன்றத்துக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறுவதன் மூலம் வட பகுதி பாதுகாப்பான பிரதேசமாக இல்லை, சாட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பை சரியாக மேற்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றார்கள் எனக் கூறுகின்றாரா? மேன்மை தாங்கிய ஜனாதிபதியும், பிரதமரும் அண்மையில் வவுனியாவுக்கு வருகை தந்த போது பாதுகாப்பு பிரச்சசினை ஏற்படவில்லையா? என்பதை மக்களுக்கு சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சு என்போர் விளக்கமளித்தால் நன்றாய் இருக்கும்.

நாட்டின் பாதுகாப்புப் பற்றி ஏன் சந்தேகம் கொள்கிறார் என்பதை தெளிவு படுத்த வேண்டும் அல்லது அவர் நீதிபதிகள் சரியான தீர்மானம் எடுக்க முடியாதவர்கள் என சந்தேகம் கொண்டுள்ளாரா என தெரியப்படுத்த வேண்டும். சட்டமா அதிபரின் செயற்பாடு நீதித்துறையின் செயற்பாடுகளிலும் சந்தேகத்தை ஏற்படுபடுத்துவதுடன் இன நல்லிணக்கத்துக்கும் கேடுவிளைவிப்பதாக அமையும். ஆகவே மீண்டும் வவுனியா நீதி மன்றத்தில் விசாரணையை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்