பிரச்சினையை உள்நாட்டில் தீர்க்காவிட்டால் விளைவு மோசமாகும் – சிங்கக்கொடி சம்பந்தன்

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தேசிய பிரச்சினையை உள்நாட்டில் தீர்க்காவிட்டால், சர்வதேச அழுத்தம் மோசமடையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசியலமைப்பு நிர்ணய சபையில் மூன்றாவது நாளாக இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இவ் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே, எதிர்க்கட்சித் தலைவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். குறித்த விவாதத்தில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”அரசியல் யாப்பு தயாரிப்பின் போது, பொதுவான விடயங்களில் தேசிய இணக்கப்பாட்டை எட்டுவது அவசியமாகும். அதிக பட்ச ஒருமித்த கருத்துக்களுடன் பொதுமக்களின் கருத்துக்களையும் அது உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை வழங்குவதாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு கூறியது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சர்வதேச மட்டத்தில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர, இந்த நிலைமை தொடர்ந்தும் மோசமடையக் கூடாது.

மேலும், கடந்த 2006ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சர்வகட்சி மாநாட்டை அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றியபோது அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமென கூறியிருந்தார். நாட்டின் ஒருமை மற்றும் இறைமை என்பன பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான களம் ஏற்பட்டுள்ளதென்றும் கூறினார்.

இந்தியா மற்றும் இணைத்தலைமை நாடுகளின் பங்களிப்புடன் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படும் என்றும், பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதே நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு கூறியவர் இன்று தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றியுள்ளமை துரதிஷ்டமானது.

நாட்டின் சகல சமூகத்தினதும் ஜனநாயகம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே, இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றோம். சர்வதேச அழுத்தம் விலகி, உள்நாட்டிலேயே பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம். அவ்வாறு தீர்க்கப்படாத பட்சத்தில், சர்வதேச அழுத்தம் அதிகரித்து, விளைவுகள் மோசமடையும் என்பதை மறந்துவிடக் கூடாது” என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்