மக்களின் அதிருப்தியைச் சமாளிக்க வேண்டிய சிக்கல் நிலமை கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் கூட்ட மைப்பினர், இன்று தமிழ் மக்களைக் கண்டு அஞ்சுகின்ற நிலையில் உள்ளமை வெட்கத்துக்கும், வேதனைக்கும் உரியது.
மக்களின் பிரச்சினை களுக்குத் தீர்வு கிட்டியிருந்தால் அவர்களைக் கண்டு அஞ்ச வேண்டிய நிலை கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டிருக்காது.
ஆனால் மக்களின் பிரச்சினை கள் எதுவும் தீர்க்கப்பட்ட தாகத் தெரியவில்லை. தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தாமே எனக் கூறிக்கொள்ளும் கூட்டமைப்பினர் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இன்றுள்ளனர்.
கூட்டமைப்பில் இல்லை ஒற்றுமைத் தன்மை
கூட்டமைப்பு இன்று ஒற்றுமையாகச் செயற்படுகின்றதா? என்ற கேள்வி எழுமாயின், இல்லையென்றபதிலே கிடைக்கும். கூட்டமைப் பில் உள்ளவர்களே அதன் தலைவரைப் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர்.
வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது கூட்ட மைப்புக்குள் இடம்பெற்ற மோதல்கள் சந்தி சிரிக்க வைத்துவிட்டது. அந்த வேளையில் கூட்டமைப்பின் தலைவர் செயலிழந்த நிலையில் காணப்பட்டார்.
அவரது சொல்லை முதலமைச்சர் உட்பட வேறு எவரும் மதித்ததாகத் தெரியவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சம்பந்தனை விமர்சிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்.
தீர்க்கப்படவில்லை மக்கள் பிரச்சினை
போர் ஓயந்து போனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை. பல விடயங்களில் இவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அரச தலைவர் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் காணப்படுகின்றார்.
புதிய அரசமைப்பின் உருவாக்கம் தொடர்பாகச் சம்பந்தன் மிகுந்த நம்பிக்கையுடன் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவே தீர்வாக அமையுமென நம்பிக்கை ஊட்டவும் அவர் தவறவில்லை. மக்களும் தலைவரின் சொல்லை ஏற்று அதை நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அதிலும் சிக்கல் நிலை தோன்றியுள்ளதைச் சமீப நாள்களாக அவதானிக்க முடிகின்றது. சம்பந்தனுக்கு எதிரானவர்கள் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கூட்ட மைப்பின் ஆளுகைக்குள் இருந்த உள்ளூராட்சிச் சபைகளால் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாமல் போனதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இதைவிட ஆளும் தரப்பினரே அங்கு மோதிக்கொண்டதையும் மக்கள் விரும்பவில்லை. முகம் சுளிக்கவே செய்தனர். மக்கள் எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த வடக்கு மாகாணசபை அவர்களை முற்றாகவே ஏமாற்றிவிட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாக மாகாணசபை எதையும் உருப்படியாகச் சாதித்ததாகத் தெரியவில்லை. வேட்பாளர் தெரிவின்போது தவறுகள் இடம்பெற்றதால் சில மாகாணசபை உறுப்பினர்கள் தமது பதவிக்கு பொருத்தமில்லாத வகையில் நடந்து கொள்கின்றனர்.
இதனால் இவர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இவர்கள் மீது மட்டுமல்லாது, கூட்ட மைப்பின் மீதும் கொதிப்பில் உள்ளனர். சில இடங்களில் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் மக்களால் துரத்திய டிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இனிமேலாவது கட்சித் தலைமைக்குப் பங்கம் விளைவிப்ப வர்களை ஒதுக்கி தள்ளிவிட்டுப் பொருத்தமானவர்களைத் தேர்தல்களில் வேட்பாளர்களாக நியமிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உள்ளது.
கூட்டமைப்பு இன்று பெயரளவுக்கு மட்டுமே எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதே தவிர அரசுக்கு ஆதரவான கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றது. தமிழர்களின் பிரச்சினைகள் தீர்வு காணப்படாது கிடப்பில் போடப்பட்டுள்ளதையே காண முடிகின்றது.
அரசியல் கைதிகளின் விவகாரம் தொடக்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டம், தமிழர் பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய குடியேற்றங்கள், மீனவர் பிரச்சினை, இடம் பெயர்ந்தோருக்கான வீட்டுத்திட்டம், நீண்ட காலமாக முகாம்களில் வசிக்கின்ற மக்களின் அவலநிலை ஆகியவை இன்னமும் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை. மக்கள் பொறுமையின் எல்லையைக் கடந்த நிலையில் உள்ளனர்.
மற்றவர்களைவிடக் கூட்டமைப்பையே இவர்கள் நம்பியிருந்ததால் அதன் மீதான வெறுப்பும் அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகவே மக்களை எவ்வாறு சமாளிப்பது என்பதைவிட, அவர்களின் பிரச்சினை களுக்குத் தீர்வு பெற்றுக் கொள்ளத்தக்க முயற்சிகளில் கூட்டமைப்பு முழு மனதுடன் இறங்க வேண்டும். இதில் தவறு ஏற்படுமாயின் அதன் விளைவுகள் பாரதூரமாக அமைந்து விடும்