தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டுள்ள ஈ.பி.ஆர்.எல்;.எவ் தரப்பினர் தேர்தலிலும் அரசியலிலும் தனியாகச் செல்ல முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், ஈ.பி.ஆர்.எல்;.எவ் மாற்று அணியினரை கூட்டமைப்புக்குள் உள்வாங்குவது குறித்து தமிழரசுக் கட்சியின் உயர்பீடம் ஆலோசனை நடத்தி வருகின்றது.
ஈ.பி.ஆர்.எல்;.எவ் இயக்கம் இரண்டாகப் பிரிவடைந்தபோது, சுரேஷ் பிறேமச்சந்திரன் தலைமையில் சுரேஷ் அணி என்றும், சுகு ஸ்ரீதரன் மற்றும் வடக்கு, கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் போன்றோரை உள்ளடக்கிய தரப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி என்றும் இயங்கின. பின்னர், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி தமது கட்சியின் பெயரை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என்று மாற்றி இயங்கத் தொடங்கியது.
இந்நிலையில், அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தங்களை இணைத்துக் கொள்வதற்கும் முயன்றனர். ஆனால், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவில் இடம்பெற்றிருந்த சுரேஷ் பிறேமச்சந்திரனின் கடும் எதிர்ப்புக் காரணமாக தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினரை கூட்டமைப்புக்குள் உள்வாங்குவது சாத்தியப்படாமற் போயிற்று. தற்போது சுரேஷ் பிறேமச்சந்திரன் தரப்பு கூட்டமைப்பின் செயற்பாடுகளில் இருந்து வெளியேறும்போது. அந்த இடத்துக்கு மாற்று ஈ.பி.ஆர்.எல்.எவ் அணியினரை உள்வாங்குவது தொடர்பில் தமிழரசுக் கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக அறிய வந்துள்ளது.