கருணாநிதி வீட்டில் ஏன் ரெய்டு இல்லை? சுப்ரமணிய சுவாமி கேள்வி

தமிழகத்தில் இன்றும் நேற்றும் நடத்தப்பட்ட வருமான வரி ரெய்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி வீட்டில் ஏன் சோதனை நடத்தவில்லை? என சுப்ரமணிய சுவாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை சுமார் 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்னபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம் மற்றும் மன்னார் குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், சசிகலா ஆதரவாளர் புகழேந்தி இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடந்துவருகின்றன. சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களின் இல்லத்திலும் சோதனை நடந்து வருகிறது. சுமார் 1800 அதிகாரிகள் மொத்தமாக இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சோதனை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, ‘கோர்ட்டில் சசிகலா பற்றிய தகவல்கள் தவிர்த்து எம்.கே (கருணாநிதி), மகள் (கனிமொழி) மோசடிகள் தொடர்பான 30 பக்க ஆவணங்களை அதிகாரிகளிடம் அளித்திருந்தேன். ஏன் இன்னும் சோதனை இல்லை?’ என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஏற்கனவே, இன்று நடைபெற்றுள்ள ஐ.டி ரெய்டுகள் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், சுப்ரமணியசுவாமியின் கருத்து மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்