திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் தொடரும் சோதனை – ஆவணங்கள் சிக்கியதா?

மன்னார்குடியில் கோலோச்சிவந்த திவாகரனின் பண்ணை வீடு, மன்னை நகர் வீடு, கல்லூரி என அனைத்திலும் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனைசெய்து வருவதால், திவாகரனின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டிருக்கிறது. இதனால், அவர்களுடைய ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆவேசத்தில் இருந்துவருகிறார்கள்.

கடந்த 9-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு, திவாகரனின் வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், தங்களை ஐ.டி அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, வீட்டை சோதனையிட வேண்டும் எனச் சொல்லிவிட்டு, இரண்டு நாள்களாக வீடுகளில் சல்லடைபோட்டு சலித்தனர். அதே சமயம், கல்லூரியிலும் சோதனை நடைபெற்றுவந்தது. திவாகரனின் வீடுகளில் சோதனை முடிந்த பிறகு, கல்லூரியில் மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நீடித்துவருகிறது. இதில், பல ஆவணங்கள் சிக்கியிருப்பதாக, வருமான வரித்துறையினர் செய்திகளைக் கசியவிட்டுள்ளனர். இந்த விசயம் திவாகரனின் ஆதரவாளர்களின் காதுகளுக்கு எட்ட, வீடுகளில் சோதனையை முடித்த அதிகாரிகள், கல்லூரி வளாகத்திற்குள் வந்து சோதனையிடத் தொடங்கியுள்ளனர்.

கல்லூரியில் தேர்வு நடைபெறுவதால், மாணவிகளுக்குத் தொந்தரவாக இருக்கும் என கல்லூரி நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் அதிகாரிகளோ, தொந்தரவு இல்லாமல் எங்கள் பணியை நாங்கள் செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு காவல்துறையினரை கல்லூரி வளாகத்துக்குள் வர வைத்து, சோதனையைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர். மூன்றாவது நாளான இன்று, கல்லூரி நுழைவுவாயிலில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என யாரையும் அனுமதிக்காமல், தற்காலிகத் தடுப்பு அமைத்து சோதனைசெய்துவருகிறார்கள். சோதனையில், பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதால்தான் தொடர்ந்து சோதனை நடைபெற்றுவருகிறது என்கிறார்கள்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்