தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது – சுரேஷ்

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவானது, தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும். அதனால் இனியும் அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது என்பதுடன், அவர்கள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவும் முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பொது நூலகத்தில் இன்று( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , “தமிழரசுக்கட்சி மக்களின் ஆணையை முழுமையாக உதாசீனம் செய்துவிட்டது. அதனால் புதிய முன்னணியின் அவசியத்தை ஈ.பி.ஆர்.எல்.எப் கடந்த சில வருடங்களாக வலியுறுத்தி வருகின்றது. அதனை இன்று அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.

தமிழரசு கட்சி, வடக்கு கிழக்கு இணைப்பு, சமஸ்டி போன்ற விடயத்தையே கைவிட்டு விட்டது. அதனால் தமிழ் மக்களின் உரிமைகளை வென்று எடுக்க புதிய முன்னணியும், புதிய தலைமையும் தேவை எனும் விடயம் இன்று அனைவராலும் உணர்ந்து கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் வந்த அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டு உள்ளனர். தமிழரசு கட்சி இன்று நேற்று அல்ல நீண்ட காலமாக எதேச்சையாக முடிவெடுத்து வருகின்றார்கள்.

கூட்டமைப்புடன் இணைந்து முடிவெடுப்பதில்லை ஒரு சிலரே முடிவு எடுத்து விட்டு அதனை மற்றவர்களுக்கு திணிக்கின்றார்கள். ஒற்றையாட்சியை ஏற்றுகொள்ள கூடிய சம்பந்தன் மாதிரியான தலைவர் இனி தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வர மாட்டார் என சிங்கள தலைவர்கள் பாராட்டும் நிலையில் தான் சம்பந்தன் இருக்கின்றார்.

இந்த அரசியல் சாசனம் இன்னமும் மோசமாக பாதிக்கப்பட போகின்றது. தமிழ் மக்களின் உரிமை என்ன ஆக போகின்றது என தெரியவில்லை.

அந்த நிலையில் தமிழ் மக்கள் உரிமைகளை வென்று எடுக்க புதிய கூட்டணி உருவாக உள்ளது. அது பொது சின்னத்துடன் ,பொது பெயருடன் காலத்தின் தேவைக்காக உருவாகும்.வடமாகாண முதலமைச்சருக்கு எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனும் விருப்பம் ஆதங்கம் இருக்கலாம். அது தவறும் இல்லை. அது அவர் விருப்பம்.

ஈ.பி.ஆர்.எல்.எப்.இனியும் சேர்த்து தமிழரசு கட்சியுடன் இயங்க முடியாது. ஏனெனில் தமிழசு கட்சி இடைக்கால அறிக்கை , அரசியல் சாசனம் தொடர்பில் அவர்கள் எடுத்த முடிவு தமிழ் மக்கள் ஆணைக்கு எதிரானது. அதனாலையே அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது.

இனியும் தமிழரசு கட்சியுடன் சேர்ந்து இயங்கவும் முடியாது. அவர்கள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவும் முடியாது” என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்