சிறையில் தற்போது அரசியல் கைதிகள் இல்லையாம் – விஜயகலா மகேஸ்வரன்

நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். தற்போது சிறைகளில் உள்ளோர் குற்றம் சாட்டப்பட்டவர்களே என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில்.உள்ள அவரது இல்லத்தில் நேற்றைதினம் (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருப்போர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளவர்கள்.

அவர்கள் தொடர்பில் நீதிமன்றங்களே முடிவெடுக்க முடியும். அது தொடர்பில் ஜனாதிபதியோ, பிரதமரோ நாங்களோ முடிவெடுக்க முடியாது. நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் மூலம் அவர்கள் குற்றவாளிகளா, நிரபராதிகளா என கண்டறியப்படும்.

அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் ஒரு தவறினை இழைத்து உள்ளது. வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கினை அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றியமை முற்று முழுதாக பிழை. அதனை நாங்கள் மன்னிக்க மாட்டோம்.

வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு வழக்கினை மாறியமை ஊடாக இந்த அரசாங்கம் எமக்கு வடக்கு கிழக்கை தமிழர்களுக்கு பிரித்து தந்துவிட்டார்கள் என்ற விடயத்தை மறைமுகமாக கூறியுள்ளது” என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்