தமிழ் தேசியம் பேசுவோருக்கு சவால் விடுப்பதாக கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் பகிரங்க விவாதத்திற்கு அழைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே சட்ட ஆலோசகர் சுகாஸ், சுமந்திரனுக்கு பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி நிமலன் சௌத்தரநாயகத்தின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட சுமந்திரன் பல கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில்,
“அரசியல் மறுசீரமைப்பு இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லை என்று கூறும் முதலமைச்சராக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி அல்லது தேசியக் கொடியை ஏற்ற முடியாது என்று போலித் தேசியம் பேசுபவர்களாக இருந்தாலும் சரி அவர்களுடன் நான் விவாதிக்கத் தயாராக இருக்கின்றேன்” என சவால் விட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் முகமாகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்த விடயம் தொடர்பில் சுமந்திரனுடன் பகிரங்க விவாதத்திற்கு நான் தயாராக உள்ளேன். இந்த விவாதம் ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு மத்தியில் பகிரங்கமாக நடைபெற வேண்டும்.
இதற்கு வரும் போது எம்.ஏ.சுமந்திரன் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் வருகைத்தரலாம். ஆனால் விவாதம் நடைபெறும் இடத்தில் அதிரடிப்படையினர் இருக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.