முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட மாவீரர்களுக்கு அவர்களின் பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்மல்க உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
ஏற்கனவே துயிலும் இல்லமாகக் கட்டமைக்கப்படாத போதிலும் இறுதி யுத்த காலத்தில் இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டன.
அங்கு தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் எடுத்துக்கொண்ட சபதத்திற்கு ஏற்ப இங்கு வணக்கம் செலுத்தப்பட்டது.
மாலை 6.05 இற்கு மணி ஒலிக்கவிடப்பட்டது. 6.06 இற்கு அக வணக்கம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து மாவீரர் கேணல் ரமணனின் (நிலான்) மகன் பொதுச் சுடரை ஏற்றினார். தொடர்ந்து ஏனையோர் மாவீரர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றினர்.
வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும் சமூக செயற்பாட்டாளருமான ச.சஜீவன் இந்த மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
நூற்றுக்கணக்கான பொதுமக்களும், இளைஞர்களும் இந்த மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முதன்முதலில் தமது பிள்ளைகளுக்கு வணக்கம் செலுத்துவது குறித்து அவர்கள் மன நிறைவடைந்தனர்.