மட்டக்களப்பு – மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.

பட்டிப்பளை பிரதேச பொது அமைப்புகள் இணைந்து இந்த மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழீழ விடியலுக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் இன்றைய தினத்தில் மேற்படி மாவீரர் துயிலும் இல்லம் தமிழீழ தேசிய வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து படையினரின் கெடுபிடிகளால் பராமரிப்பின்றி இருந்த இந்த துயிலும் இல்லம் இன்று எழுச்சிக் கோலம் பூண்டிருந்தது.

மாலை 6.05 இற்கு மணி ஒலிக்கப்பட்டு 6.06 இற்கு அக வணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. மாவீரரின் தாயார் ஒருவர் பொதுச் சுடரை ஏற்ற ஏனைய மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் ஈகச்சுடர்களை ஏற்றினர்.

மாவீரர் துயிலும் இல்லப் பாடலும் ஒலிக்கவிடப்பட்டது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

துயிலும் இல்லத்தில் தமிழீழ எழுச்சிப் பாடல்கள் ஒலித்தவண்ணம் இருந்தன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்