ஐரோ.ஒன்றியத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் – த.தே.கூட்டமைப்பின் தலைவர் சந்திப்பு!

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பிரிவுத் தலைவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தன் எடுத்துரைத்ததாக கூட்டமைப்புத் தரப்பு தெரிவித்திருக்கிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர் இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிகளில் இதுவும் ஒன்று எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விரைந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் படையின் வசமுள்ள இதுவரை மீளளிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் தொடர்பில் எடுத்துரைத்த சம்பந்தன் மக்கள் தமது சொந்தக் காணிகளை விடுவிக்கமாறு கோரி போராடுகின்றார்கள் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களது இத்தகைய நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ள முடியாது எனத் தெரிவித்த அவர் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகள் விரைவாக ஆரம்பிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை நிலையினை தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் முடிந்ததன் பிற்பாடு புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஏற்படுத்தப்படுகின்ற புதிய அரசியலமைப்பானது நியாயமானதும் நிரந்தரமானதும் தமிழ் மக்களுக்குத் திருப்தியளிக்கக்கூடிய ஒன்றாகவும் அமைய வேண்டும் ம் எனவும் இரா சம்பந்தன் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பிரிவுத் தலைவரிடம் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்