ரெலோவின் உயர் மட்டக்குழு கூட்டத்திற்கு விசேட அழைப்பு: டெனிஸ்வரன்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உயர் மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டெனிஸ்வரன் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார்.

மேற்படி கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) காலை 11 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கட்சியின் உயர் மட்டக் குழுக்கூட்டத்திற்கு சமுகமளிக்குமாறு எனக்கு அக்கட்சியின் செயலாளர் விசேட அழைப்பினை விடுத்துள்ளார். வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இவ்விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் நேற்று (திங்கட்கிழமை) எனது நிலைப்பாடு தொடர்பாக தெளிவான விளக்கத்தினை கட்சியின் தலைவரும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு தெரிவித்ததன் பின்னர் செய்தியாளர் சந்திப்பினூடாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தேன்.

கடந்த 12ஆம் திகதி கூட்டத்தில் நான் வெளிப்படுத்தியிருந்த அதே நிலைப்பாட்டிலேயே தற்பொழுதும் இருக்கின்றேன். அதிலிருந்து துளியேனும் மாறப்போவதில்லை என தெளிவாக கட்சியின் தலைவருக்கும், ஊடகங்களுக்கும் வெளிப்படுத்தியிருந்தேன்.

இச் சந்தர்ப்பத்திலேயே உயர் மட்டக்குழு கூட்டத்திற்கான விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் டெனிஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்