விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் பெற்றுக்கொள்ளப்படலாம் – எம்.எம்.முஹமட்

நாடு எங்கிலுமுள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்புக்கள் வழங்கப்படுகின்றன. தேவையான இடங்களில் மாத்திரம் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முஹமட் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முஹமட் மட்டக்களப்பில் வைத்து தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

உள்ளுராட்சித் தேர்தலில் 43 அங்கீகரிக்கப்படட அரசியல் கட்சிகளும், 222 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. நாடெங்கிலும் 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள், 8 ஆயிரத்து 356 உறுப்புரிமைகளுக்காகப் போட்டியிடுகின்றார்கள். 13ஆயிரத்து 374 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாள 1 லட்சத்து 75ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்களும், அரசாங்க பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர் உட்பட்டவர்களும் வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் பணிகளில் ஈடுபடவிருக்கிறார்கள்.

நாடு எங்கிலுமுள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும், பொலிஸ் பாதுகாப்புக்கள் வழங்கப்படுகின்றன. தேவையான இடங்களில் மாத்திரம் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன. இதுவரை தேர்தல் பணிகளுக்கு ஈடுபடுவதற்கான நியமனக்கடிதங்கள் கிடைக்கப்பெற்று தேர்தல் கமடைகளுக்குச் செல்லாத அரசாங்க உத்தியோகத்தர்களும், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களும் கட்டாயம் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய இடத்திற்கு உரிய நேரத்துக்கு கடமைக்காக அறிக்கையிட வேண்டும்.

தவறுகின்ற உத்தியோகத்தர்களுக்கெதிராக தேர்தல் ஆணைக்குழு ஒழுக்காற்று சட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகி வருகின்றது. அதே நேரம் அரசாங்க வாகனங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவத்தாட்சி அலுவலரிடமிருந்தோ, தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்தோ அறிவுறுத்தல் கிடைத்திருப்பின் அவற்றை அனுப்பி வைக்கத் தவறுகின்றவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வாக்களிப்புகள் நிறைவடைந்ததும், அந்தந்த வட்டாரங்களிலேயே பிரதான வாக்கெண்ணும் நிலையங்களில் இடம்பெறும், வட்டாரத்தின் முடிவுகள் அங்கு அறிவிக்கப்படுவதுடன், தெரிவத்தாட்சி அலுவலரால் மாவட்ட மத்திய நிலையங்களில் உள்ளுர் அதிகார சபைகளின் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முஹமட் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்