தமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!

தமிழகத்தின் தமிழினப் பற்றாளர்களில் குறிப்பிடக்கூடியவரான திரு. மருதப்பன் நடராஜன் அவர்கள் உடல்நலக்குறைவினால் இன்று அதிகாலை காலமான செய்தி எம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. 1943 ஆம் ஆண்டு தமிழகத்தின் தஞ்சாவூர்மாவட்டம் விளார் எனும் கிராமத்தில் பிறந்தவர் நடராஜன். இயல்பாகவே தமிழ்மொழியிலும் அரசியலிலும் ஈடுபாடுகொண்டிருந்தவர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்திலேயே மொழிப்போர் தீவிரமடைந்திருந்தது. பொங்குதமிழுக்கு பங்கம் ஏற்படாதிருக்க தாய்த்தமிழ் மொழியுணர்வோடு இந்த மொழிப்போரில் தன்னை இணைத்து, 1965இல் இந்திமொழித் திணிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர். இவர் ஏற்படுத்திய மொழி உணர்வு இளைஞர்களின் நெஞ்சங்களில் தொற்றி, தமிழ்நாட்டில் தமிழ்மொழி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தில் மாணவ தலைவராக முன்னின்று உழைத்தவர். இவர் 1975 இல் திருமண வாழ்வில் இணைந்துகொண்டார். தமிழினத்தின்மீதும், தமிழ்மொழியின்மீதும், தமிழர்களின் பண்பாட்டின்மீதும் தீராக்காதல் கொண்டவர். தமிழ்ப் பண்பாட்டுவிழாக்களை சிறப்புற நடத்துவதற்கு உற்சாகத்துடன் ஒத்துழைப்பு வழங்குபவர். தற்பெருமையின்றி தமிழுணர்வோடு செயற்பட்டு வந்தவர். 2009 இல் தமிழர் தாயகத்தில் இலங்கை அரசு நடத்தியது தமிழினப்படுகொலைதான் என, மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு பின்னணியிற் பலமாக இருந்து, ஊக்குவிப்பு வழங்கியவர் அமரர்.ம. நடராஜன். அதுமட்டுமன்றி பலநாடுகளுக்கு பயணித்து, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை எடுத்துவிளக்கியதுடன், தமிழினத்தின்மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் எடுத்துரைத்தவர். இதன்மூலம் தமிழ்மக்களின் பிரச்சினைகளை வெளியுலகிற்கு வெளிச்சமிட்டவர். பல்கலைக்கழக கல்வியை முடித்து மக்கள் செய்தித் தொடர்பு அதிகாரியாக அரசுப்பணி பெற்றுக்கொண்ட இவர், பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க முன்னின்று பாடுபட்டார். தமிழர்கள் மீதும் தமிழ்மொழிமீதும் பற்றுக்கொண்டிருந்த காரணத்தால், தமிழர் தாயகவிடுதலைப்போருக்கு ஆதரவு வழங்கினார். தாயகவிடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஒப்புவித்த உயிர்க்கொடையாளர்களின் நினைவாக தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் என்கின்ற நினைவிடத்தை அமைப்பதற்கு உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா. பழ.நெடுமாறன் அவர்களுடன் முன்னின்று உழைத்தார். இவருக்கு உரித்தான நிலத்திலேயே அந்த நினைவுமுற்றம் அமைந்திருக்கின்றது. இத்தகைய மொழிப்பற்றும் இனப்பற்றும் கொண்டிருந்த இவரது மறைவுச்செய்தி தமிழ்மக்களுக்கு பேரிழப்பாகவே எண்ணுகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழ் உள்ளவரை அன்னாரின் நினைவுகள் நிலைத்திருக்கும்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

அனைத்துலகத் தொடர்பகம்.

தமிழீழ விடுதலைப் புலிகள்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்